செய்திகள்
நெல்லை- தென்காசியில் விபத்து- தொழிலாளி உள்பட 3 பேர் பலி
நெல்லை மற்றும் தென்காசியில் நடந்த பல்வேறு சாலை விபத்துகளில் தொழிலாளி உள்பட 3 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
நெல்லை:
நெல்லை பேட்டையில் உள்ள கக்கன்ஜி நகரை சேர்ந் தவர் சண்முகவேல் (வயது60), தொழிலாளி. இவர் நேற்று சைக்கிளில் பழைய பேட்டை அருகே சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக தூத்துக்குடியை சேர்ந்த முத்துக்குமார் என்பவர் ஓட்டி வந்த மினி லாரி, சண்முகவேல் மீது மோதியது.
இதில் பலத்த காயம் அடைந்த சண்முகவேலை பாளை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலன் அளிக்காமல் நேற்று இரவு சண்முகவேல் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து நெல்லை மாநகர போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் விஜய் கோல்டன் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
சிவகிரி அருகே உள்ள ராயகிரியை சேர்ந்தவர் மாரியப்பன். இவரது மகன் சண்முகராஜா (28). இவர் நேற்று இரவு மோட்டார் சைக்கிளில் பாளை 4 வழிச் சாலை ஐ.ஆர்.டி. பாலிடெக்னிக் அருகே சென்று கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராத விதமாக மோட்டார் சைக்கிளில் இருந்து சறுக்கி கீழே விழுந்தார்.
இதில் படுகாயம் அடைந்த சண்முகராஜாவை பாளை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலன் அளிக்காமல் இன்று காலை சண்முகராஜா பரிதாபமாக இறந்தார். இதுகுறித்தும் நெல்லை மாநகர போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
செங்கோட்டை அருகே உள்ள இலஞ்சியை சேர்ந்தவர் சண்முகசுந்தரம் (42). இவர் தற்போது தென்காசி அருகே உள்ள மேலகரத்தில் வசித்து வந்தார். நேற்று இவர் மோட் டார் சைக்கிளில் தென்காசியில் உள்ள நெல்லை ரோட்டில் வேகமாக வந்தார். அப்போது எதிரே தென்காசியை சேர்ந்த முருகராஜ் (54) என்பவர் ஓட்டி வந்த லாரி, சண்முக சுந்தரம் ஓட்டி வந்த மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் சம்பவ இடத்திலேயே சண்முகசுந்தரம் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து தென்காசி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.