செய்திகள்

வரதட்சணை கொடுமையால் இளம்பெண் அடித்து கொலை?- கணவர் மீது புகார்

Published On 2018-08-18 09:57 GMT   |   Update On 2018-08-18 09:57 GMT
கருவடிக்குப்பத்தில் வரதட்சணை கொடுமையால் இளம்பெண் அடித்து கொலை செய்யப்பட்டதாக கணவர் மீது பெற்றோர் போலீசில் புகார் செய்துள்ளனர்.

புதுச்சேரி:

புதுவை கருவடிக்குப்பம் விநாயகர் கோவில் தெருவை சேர்ந்தவர் பொன்னரசன் (வயது 30). கட்டிட தொழிலாளி. இவரும், செல்லப்பெருமாள் பேட்டையை சேர்ந்த சுந்தரேசன் மகள் நிவேதாவும் (23) கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு 3 மாத ஆண் குழந்தை உள்ளது.

இந்த நிலையில் நேற்று இரவு பொன்னரசன் மது குடித்து விட்டு வீட்டுக்கு வந்ததாக கூறப்படுகிறது. இதனால் கணவன்- மனைவிக்கிடையே தகராறு ஏற்பட்டதாக தெரிகிறது.

இதில், விரக்தி அடைந்த நிவேதா தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்து மின் விசிறியில் சேலையால் தூக்குபோட்டு தொங்கினார்.

இதனைக்கண்ட பொன்னரசனின் தாய் செந்தமிழ்செல்வி அக்கம் பக்கத்தினர் உதவியுடன் நிவேதாவை மீட்டு புதுவை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றார். அங்கு பரிசோதித்த டாக்டர்கள் நிவேதா ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

இதுகுறித்த புகாரின் பேரில் லாஸ்பேட்டை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் தயாளன், ஏட்டு ராமச்சந்திரன் ஆகியோர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

இந்த நிலையில் நிவேதாவின் தந்தை சுந்தரேசன் லாஸ்பேட்டை போலீசில் வரதட்சணை கொடுமையால் தனது மகளை பொன்னரசன் அடித்து கொன்று விட்டதாக கூறியுள்ளார். இது குறித்தும் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.

Tags:    

Similar News