முல்லை பெரியாறு நீர்மட்டத்தை குறைக்கச் சொல்லும் கேரள முதல்வருக்கு மேலூர் விவசாயிகள் கண்டனம்
மதுரை:
மேலூர் பகுதி முல்லை பெரியாறு, வைகை ஒரு போக பாசன விவசாயிகள் ஆலோசனை கூட்டம் தலைவர் முருகன் தலைமையில் நடந்தது.
தற்போது கடும் மழையால் பாதிக்கப்பட்டு உயிரிழந்த மக்களுக்கு இரங்கல் தெரிவிக்கப்பட்டு, சகஜ நிலைக்கு திரும்ப பிரார்த்தனை செய்யப்பட்டது, இதனைத் தொடர்ந்து முல்லை பெரியாறு, வைகை ஒருபோக பாசன பகுதியான, மேலூர் பகுதியில் 2 வருடமாக போதிய தண்ணீர் இன்றி 1 லட்சத்து 50 ஆயிரம் ஏக்கர் விவசாய நிலம் பாதிக்கப்பட்டுள்ளது.
தற்போது நீர்பிடிப்பு பகுதிகளில் தண்ணீர் உள்ளதால் மேலூர் ஒருபோக பாசனத்திற்காக போதிய தண்ணீர் திறக்க மாவட்ட நிர்வாகமும், பொதுப்பணித்துறையினரும், நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இல்லாவிட்டால் அனைத்து விவசாயிகளையும் ஒன்றிணைத்து பெரிய போராட்டம் நடத்தப்படும், முல்லை பெரியாறு அணை பகுதியில், பல்வேறு தொழில் கமிட்டிகளும், உச்சநீதிமன்றமும் 142 அடி நீர் தேக்கலாம் என்று கூறிய பின்பும், அரசியல் சுயலாபத்திற்காக நீர்மட்டத்தை குறைக்க வலியுறுத்தும் கேரள முதல்வர் பினராய் விஜயனுக்கு கண்டனம் தெரிவிக்கப்பட்டது.
கடந்தாண்டு தண்ணீர் கேட்டு 4 வழிச்சாலையை மறித்து தண்ணீருக்காக போராடிய விவசாயிகள் மீது போடப்பட்ட வழக்குகளை திரும்ப பெற வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. #mullaperiyardam