செய்திகள்

முல்லைப் பெரியாறு அணை பாதுகாப்பாக உள்ளது - கேரள முதல்வருக்கு தமிழக முதல்வர் கடிதம்

Published On 2018-08-16 09:33 GMT   |   Update On 2018-08-16 09:33 GMT
முல்லைப் பெரியாறு அணை பாதுகாப்பாக உள்ளதாகவும், நீர்மட்டம் 142 அடியை தாண்டாமல் நிர்வகித்து வருவதாகவும் தமிழக முதலமைச்சர் கேரள முதலமைச்சருக்கு கடிதம் எழுதி உள்ளார். #KeralaRain #MullaperiyarDam #EdappadiPalaniswami
சென்னை:

கேரள மாநிலத்தில் பெய்து வரும் கனமழையால் அனைத்து அணைகளும் முழு கொள்ளளவை எட்டியுள்ளன. இதனால் அதிக அளவிலான உபரி நீர் திறக்கப்பட்டு, ஆறுகளில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

முல்லைப்பெரியாறு அணையின் நீர்மட்டம் மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு 142 அடியை எட்டியுள்ளது. இதையடுத்து, அணையின் 13 மதகுகள் திறக்கப்பட்டு கேரளாவுக்கு விநாடிக்கு 11,000 கனஅடி நீர் திறக்கப்பட்டு வருகிறது. இந்த நீர் இடுக்கி அணையை சென்றடையும். ஆனால் அந்த அணையும் ஏற்கனவே நிரம்பியுள்ளதால், செருதோணி அணையில் இருந்து கூடுதல் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது.



இந்நிலையில், பாதுகாப்பு கருதி முல்லைப்பெரியாறு அணையின் நீர்மட்டத்தை 142 அடியில் இருந்து 136 அடியாக குறைக்க வலியுறுத்தி தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு கேரள முதல்வர் பினராயி விஜயன் கடிதம் எழுதினார். அணைக்கு நீர்வரத்து அதிகமாக இருப்பதால் அணையின் தேக்க கொள்ளளவை குறைக்க வேண்டும் என்று கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

இதனையடுத்து பினராஜி விஜயனுக்கு தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி பதில் கடிதம் அனுப்பி உள்ளார். அதில், முல்லைப் பெரியாறு அணை பாதுகாப்பாக உள்ளது என்றும் 142 அடியை தாண்டாமல் அணையின் நீர்மட்டத்தை நிர்வகித்து வருவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் முல்லை பெரியாறு அணை நீர்ப்படிப்பு பகுதிகளில் பெய்து வரும் மழையின் அளவை தமிழக அதிகாரிகளிடம் பகிர்ந்துகொள்ள வேண்டும் என்றும் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தி உள்ளார். #KeralaRain #MullaperiyarDam #EdappadiPalaniswami
Tags:    

Similar News