ஏற்காடு:
ஏற்காடு மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் சில தினங்களாக நல்ல மழை பெய்து வருவதால் கடுமையான குளிர் வாட்டி வதைக்கிறது.
இரவு நேரங்களில் கன மழையும், பகல் நேரங்களில் சாரல் மழையும் பெய்துவருவதால் கடுமையான குளிர் வாட்டி வதைக்கிறது. மாலை 6 மணிக்கு மேல் வீட்டை விட்டு வெளியே வரமுடிபியாத அளவிற்கு குளிர் நிலவுகிறது. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.
ஏற்காட்டின் முக்கிய விவசாயமான காபி தொழில் இந்த மழையால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக ஆகஸ்ட் செப்டம்பர் மாதங்களில் காபி செடிகளுக்கு மருந்து அடிப்பது வழக்கம், அப்படி அடிக்கப்பட்ட மருந்துகள் மழை வராமல் இருந்தால் தான் மண்ணில் இறங்கி காபி செடிகளுக்கு ஏறும்.
தொடர்ந்து மழை பெய்து வருவதால் மருந்து மண்ணில் நிற்பதில்லை. இதனால் காபி செடிகளுக்கு மருந்து ஏறாத நிலை உள்ளது. மேலும் அதிகமாக மழை பெய்வதால் காபி செடிகளில் ஒருவிதமான ஒட்டுண்ணிகள் வளர ஆரம்பித்து காபியின் மகசூல் குறைய வாய்ப்புள்ளது.
இதற்கிடையே இன்று காலை முதல் சாரல் மழை பெய்து வருவதால் பள்ளி கல்லூரி செல்லும் குழந்தைகள் பெரிதும் சிரமத்திற்குள்ளானார். பனி மூட்டம் நிலவுவதால் வாகனங்கள் முகப்பு விளக்குகளை எரிய விட்டபடி மெதுவாக செல்கின்றன.