செய்திகள்

வேலூர் அதிமுக பிரமுகர் நெரிசலில் சிக்கி பலி

Published On 2018-08-09 11:52 GMT   |   Update On 2018-08-09 11:52 GMT
கருணாநிதிக்கு அஞ்சலி செலுத்த வந்த வேலூர் அதிமுக பிரமுகர் நெரிசலில் சிக்கி பரிதாபமாக உயிரிழந்தார். #karunanidhideath #dmk

வேலூர்:

தி.மு.க. தலைவர் கருணாநிதி மரணம் அடைந்ததை தொடர்ந்து அவரது உடல் பொதுமக்கள் அஞ்சலி செலுத்துவதற்காக நேற்று சென்னை ராஜாஜி ஹாலில் வைக்கப்பட்டது.பொதுமக்களின் கூட்டம் கட்டுக்கடங்காத வகையில் இருந்தது.

கருணாநிதியின் உடலை பார்த்து விட வேண்டும் என்ற ஆர்வத்தில் பொதுமக்கள் முண்டியடித்துக் கொண்டு சென்றனர். சிலர் தடுப்புகளை தகர்த்து விட்டு சென்றனர். இதில் ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 26 பேர் படுகாயம் அடைந்தனர்.

அவர்கள் உடனடியாக ஆம்புலன்ஸ் மூலம் சென்னை அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். அதில் 4 பேர் இறந்தனர். ஆண் ஒருவர் அடையாளம் தெரியாமல் இருந்தது. அவரது புகைப்படம் இன்று செய்திதாளில் வெளியாகி இருந்தது. இதனை அவரின் உறவினர்கள் பார்த்து அடையாளம் கண்டு பிடித்தனர்.

அவர் வேலூர் கஸ்பாவை சேர்ந்த மோகன் (வயது65) என்பது தெரியவந்தது. இவர் வேலூர் கஸ்பா பகுதி அ.தி.மு.க. துணை செயலாளராக பணியாற்றி வந்தார். அண்ணா காலத்தில் தி.மு.க.வில் இருந்த அவர் எம்.ஜி.ஆர். பிரிந்து சென்ற போது அ.தி.மு.க.வில் சேர்ந்தார். கருணாநிதி இறந்த தகவல் கேட்டு அவருக்கு அஞ்சலி செலுத்துவதற்காக சென்னைக்கு புறப்பட்டார்.

அவரது மனைவி பார்வதி சென்னைக்கு செல்ல வேண்டாம் என்று கூறினார். ஆனால் அவர் திராவிட தலைவர்களில் கடைசி தலைவர் இறந்து விட்டார். நான் கட்டாயம் அவர் உடலை பார்த்து அஞ்சலி செலுத்தியே ஆகவேண்டும் என்று கூறி ரூ.2 ஆயிரம் பணம் வாங்கி கொண்டு சென்னைக்கு ரெயிலில் வந்தார்.

அங்கு வந்த அவர் நெரிசலில் சிக்கி பரிதாபமாக இறந்து விட்டார். இறந்த மோகனுக்கு பார்வதி என்ற மனைவி, மகன் பாலாஜி, மகள் இந்துமதி உள்ளனர். #karunanidhideath #dmk

Tags:    

Similar News