செய்திகள்

போலி சான்றிதழ்கள் சமர்பிப்பு - ஆஸ்திரேலியாவுக்கு சென்ற தமிழக மாணவர்கள் 22 பேரின் விசா ரத்து

Published On 2018-08-09 05:59 GMT   |   Update On 2018-08-09 05:59 GMT
ஆஸ்திரேலிய அரசிடம் போலி சான்றிதழ்கள் சமர்பித்தது தொடர்பாக தமிழம், கேரளாவை சேர்ந்த 22 மாணவர்களின் விசா ரத்து செய்யப்பட்டது.
கோவை:

தமிழ்நாடு, கேரளாவை சேர்ந்த மாணவர்கள் சிலர் ஆஸ்திரேலியாவில் படித்து வருகின்றனர். ஒரு சிலர் அங்குள்ள தனியார் நிறுவனங்களில் வேலை பார்த்து வருகின்றனர். இவர்களில் 22 பேர் ஆஸ்திரேலிய அரசிடம் சமர்பித்திருந்த சான்றிதழ்கள் போலியானவை என கூறப்படுகிறது.

இதை கண்டறிந்த ஆஸ்திரேலிய அதிகாரிகள் 22 பேரின் விசாவை ரத்து செய்து அதற்கான நோட்டீசை மாணவர்களிடம் வழங்கி உள்ளனர். இதனால் அவர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

விசா ரத்து செய்யப்பட்டுள்ளதால் 22 பேரும் உடனடியாக ஊர் திரும்ப வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். இவர்கள் கோவை மாவட்டத்தில் இயங்கி வரும் 3 தனியார் ஏஜென்சிகள் மூலம் ஆஸ்திரேலியாவுக்கு சென்றவர்கள் ஆவார்கள்.

மாணவர்கள் தங்களது அசல் சான்றிதழ்களை தனியார் நிறுவனத்திடம் கொடுத்துள்ளனர். ஆனால் அந்த நிறுவனத்தினர் போலியாக தேசிய அங்கீகார வாரியத்தின் சான்றிதழ்களை வழங்கி தங்களை ஆஸ்திரேலியாவுக்கு அனுப்பிவிட்டதாக பாதிக்கப்பட்ட மாணவர்கள் குற்றம்சாட்டி உள்ளனர்.

தற்போது ஆஸ்திரேலியாவில் தவித்து வரும் மாணவர்கள் விவசாய மற்றும் நடுத்தர குடும்பத்தை சேர்ந்தவர்கள் ஆவார்கள். இவர்களை அங்குள்ள இந்திய தூதரகம் மூலமாக சொந்த ஊருக்கு அனுப்புவதற்கு தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

இதற்கிடையே மாணவர்களுக்கு போலி சான்றிதழ்கள் வழங்கிய ஏஜென்சிகள் குறித்து அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். அசல் சான்றிதழ்களை மாணவர்கள் கொடுத்திருந்த நிலையில் அவர்களுக்கு போலி சான்றிதழ்கள் வழங்கியது ஏன்? எவ்வாறு சான்றிதழ்கள் வழங்கப்பட்டன? அதில் நடந்த முறைகேடுகள் என்னென்ன? இதில் சம்பந்தப்பட்டவர்கள் யார்-யார்? என விசாரணை நடைபெற்று வருகிறது.

இதுகுறித்து போலீசாரிடம் புகார் செய்யப்பட்டுள்ளது. அதன்பேரில் போலீசாரும் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
Tags:    

Similar News