செய்திகள்

கருணாநிதி உடலுக்கு அஞ்சலி - ராஜாஜி அரங்கில் கூட்டநெரிசலில் சிக்கி 2 பேர் பலி

Published On 2018-08-08 16:35 GMT   |   Update On 2018-08-08 16:35 GMT
கருணாநிதி உடலுக்கு அஞ்சலி செலுத்த வந்தபோது, கூட்ட நெரிசலில் சிக்கி பெண் உள்பட 2 பேர் பலியாகினர்.
சென்னை:

ராஜாஜி அரங்கில் உள்ள கருணாநிதி உடலை  தொண்டர்கள் முண்டியடித்துக் கொண்டு பார்க்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது. இதனால் போலீசார் லேசான தடியடி நடத்தி கூட்டத்தை கலைத்தனர்.கலைஞர் உடல் உள்ள இடத்தில் கட்டுப்படுத்த முடியாத அளவு தொண்டர் கூட்டத்தை அதிரடிப் படையினர் ஒழுங்குபடுத்துகின்றனர்.

கருணாநிதி உடலை காண நூற்றுக்கணக்கான தொண்டர்கள் முண்டியடித்துக்கொண்டு குழுமியதால் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. கூட்ட நெரிசல் காரணமாக உடல் அரங்கத்திற்குள் கொண்டு செல்லப்பட்டது.

கருணாநிதிக்கு அஞ்சலி செலுத்துவதற்காக திமுக தலைவர்களும், தொண்டர்களும் அலை அலையாக வந்த வண்ணம் இருந்தனர். அவர்கள் அண்ணாசாலை வழியாக ராஜாஜி அரங்கிற்கு சென்று அஞ்சலி செலுத்திவிட்டு சிவானந்த சாலை வழியாக வெளியேற ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தது.

4 பாதைகளில் மக்கள் உள்ளே வரவும், வெளியே செல்லவும் வழிகள் உருவாக்கப்பட்டுள்ளன. அந்த 4 பாதைகளிலும் மக்கள் வெள்ளம் போல் காட்சி அளித்தனர். வாலாஜா சாலை, சிவானந்த சாலை, அண்ணா சாலை ஆகிய 3 சாலைகளிலும் எங்கு திரும்பினாலும் மக்கள் தலைகளாக காட்சி அளித்தது. லட்சக்கணக்கான மக்கள் திரண்டு வந்து தங்கள் தலைவனுக்கு கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தி சென்றனர்.

கூட்டம் கட்டுகடங்காமல் போகவே தொண்டர்களிடையே தி.மு.க செயல் தலைவர் மு.க. ஸ்டாலின் பேசி அவர்களும் கலைந்து போகுமாறு கூறினார்.

ராஜாஜி அரங்கில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 2 பெண் போலீசார் உட்பட 26 பேர் படுகாயம் அடைந்துள்ளனர். படுகாயம் அடைந்தவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

கூட்ட நெரிசலில் சிக்கி எம்.ஜி.ஆர் நகரைச் சேர்ந்த செண்பகம் (60), மற்றும் 60 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவரும் உயிரிழப்பு: 8 பேர் ஆபத்தான நிலையில் ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர்.
Tags:    

Similar News