வேதாரண்யம் அருகே இலங்கைக்கு படகில் கடத்த முயன்ற 192 கிலோ கஞ்சா பறிமுதல் - 2 பேர் கைது
வேதாரண்யம்:
நாகை மாவட்டம் வேதாரண்யம் பகுதியில் இருந்து கடல் வழியாக கஞ்சா மற்றும் தங்கம் அடிக்கடி கடத்தப்படுகிறது. இதைத்தொடர்ந்து கடலோர காவல்படை போலீசார் ரோந்து படகில் சென்று தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த நிலையில் வேதாரண்யத்தை அடுத்த பெரிய குத்தகையில் இருந்து இலங்கைக்கு கஞ்சா கடத்தப்படுவதாக கடலோர காவல்படை டி.எஸ்.பி. கலித்தீர்த்தானுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதைத்தொடர்ந்து சம்பவ இடத்துக்கு போலீசார் விரைந்து சென்று அதிரடி சோதனை நடத்தினர். அப்போது ஒரு படகு கடலோரம் நின்றுகொண்டிருந்தது. கடற்கரையில் 6 மூட்டைகளில் 192 கிலோ கஞ்சா கடத்த தயாராக இருந்தது கண்டறியப்பட்டு கைப்பற்றப்பட்டது.
மேலும் இந்த கடத்தலில் ஈடுபட்ட வானவன் மாதேவியை லோடு ஆட்டோ டிரைவர் ரமேஷ்குமார் (வயது 30), யாழ்பாணம், மருதங்தேனியை சேர்ந்த சக்திவேல் (வயது 43) ஆகிய 2 பேரை போலீசார் பிடித்து கைது செய்தனர். மேலும் பெரிய குத்தகையை சேர்ந்த முனீஸ்வரன், யாழ்பாணத்தை சேர்ந்த சுகுகுமார் ஆகியோர் காரில் தப்பி சென்று விட்டனர். அவர்களை போலீசார் தேடி வருகின்றனர். பிடிப்பட்ட 2 பேரிடமும் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இச்சோதனையின் போது கடலோர காவல்படை இன்ஸ்பெக்டர் மும்தாஜ் பேகம், வேதாரண்யம் இன்ஸ்பெக்டர் முருகவேல் ஆகியோர் உடன் இருந்தனர்.