செய்திகள்

உத்திரமேரூர் அருகே மோட்டார் சைக்கிளில் சென்ற பெண்ணிடம் நகை பறிப்பு

Published On 2018-08-03 22:23 IST   |   Update On 2018-08-03 22:23:00 IST
உத்திரமேரூர் அருகே மோட்டார் சைக்கிளில் சென்ற பெண்ணிடம் நகை பறித்த மர்ம நபரை போலீசார் தேடி வருகின்றனர்.
உத்திரமேரூர்:

உத்திரமேரூர் அடுத்த காரணிமண்டபம் பகுதியை சேர்ந்தவர் ஸ்டாலின் (வயது 38). இவரது மனைவி பிரேமா (33). இவர்கள் இருவரும் நேற்று முன்தினம் இரவு மோட்டார் சைக்கிளில் மானாம்பதியில் இருந்து காரணிமண்டபம் நோக்கி சென்று கொண்டிருந்தனர்.

வயலூர் கூட்ரோடு அருகே வந்தபோது மர்ம நபர் மோட்டார் சைக்கிளில் மோதுவதுபோல வந்து பிரேமா அணிந்திருந்த 3 பவுன் தங்கச்சங்கிலியை பறித்துவிட்டு மோட்டார் சைக்கிளில் தப்பிச்சென்றார்.

உடனே ஸ்டாலின் மற்றும் அருகில் இருந்தவர்கள் மோட்டார் சைக்கிளில் பின்தொடர்ந்து துரத்தி சென்றனர். அப்போது அந்த மர்ம நபர் நோனாம்பூண்டி அருகே மோட்டார் சைக்கிளை விட்டுவிட்டு தங்கச்சங்கிலியுடன் தப்பி ஓடிவிட்டார்.

இதுகுறித்து பெருநகர் போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஜெகதீசன் வழக்குப்பதிவு செய்து அந்த மர்ம நபர் விட்டு சென்ற மோட்டார் சைக்கிளின் பதிவு எண்ணை ஆய்வு செய்தார். அப்போது அந்த எண் போலியானது என்பது தெரியவந்தது. மேலும் தப்பி ஓடிய மர்ம நபரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர். 
Tags:    

Similar News