சீர்காழி பகுதியில் திடீர் மழை- கடைவீதியில் வெள்ளம்
சீர்காழி:
தமிழகத்தில் பருவமழை சரியாக பெய்யாத நிலையில் விவசாயிகள் விவசாய பணிகளை தொடங்க முடியாமல் இருந்து வந்தனர். இந்த நிலையில் கர்நாடகாவில் நீர்பிடிப்பு பகுதிகளில் கன மழை பெய்ததால் அணைகள் நிரம்பி உபரி நீர் மேட்டூர் அணைக்கு திறந்து விடப்பட்டது.
இதனைத் தொடர்ந்து டெல்டா விவசாய பாசனத்துக்காக மேட்டூர் அணையில் இருந்து கல்லணைக்கு வந்த காவிரி கால்வாய்களில் பிரிந்து விடப்பட்டு வருகிறது.
கடை மடை பகுதிக்கு காவிரி நீர் சென்ற நிலையில் நாகை மாவட்டம் சீர்காழி, கொள்ளிடம், பூம்புகார், திருமுல்லைவாசர், வைத்தீஸ்வன் கோவில் உள்ளிட்ட பகுதிகளில் நேற்று இரவு 9 மணி முதல் 10.30 மணிவரை பலத்த காற்றுடன் மழை பெய்தது. இதில் சில இடங்களில் மரங்கள் முறிந்து விழுந்தன. இதனால் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டது. இரவு முழுவதும் மின்சாரம் இல்லாமல் பொதுமக்கள் அவதிபட்டனர். சீர்காழி காமராஜ் வீதியில் மழை வெள்ளம் தேங்கியதால் இன்று காலை அப்பகுதியில் நடந்து செல்ல முடியாமல் பொதுமக்களும், வியாபாரிகளும் சிரமப்பட்டனர். அங்கு சேதங்கிய நீரை அகற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.