செய்திகள்

தாம்பரம் அருகே மோட்டார்சைக்கிளில் இருந்து தவறி விழுந்த கல்லூரி மாணவர் பலி

Published On 2018-07-31 21:37 IST   |   Update On 2018-07-31 21:37:00 IST
தாம்பரம் அருகே மோட்டார்சைக்கிளில் இருந்து தவறி விழுந்த கல்லூரி மாணவர் பலியானார். அவரது நண்பர் படுகாயம் அடைந்தார். #Accident #CollegeStudentDeath
தாம்பரம்:

சென்னையை அடுத்த அம்பத்தூர் ஒரகடம் காந்திநகர் பகுதியை சேர்ந்தவர் ஜானகிராமன். இவரது மகன் ஷாம் சுந்தர் (வயது 18). இவர் ராமாபுரத்தில் உள்ள தனியார் கல்லூரியில் பி.காம் முதலாம் ஆண்டு படித்து வந்தார். அம்பத்தூர், கள்ளிக்குப்பம் சீனிவாச நகர் சிவசக்தி தெருவை சேர்ந்தவர் பரத் (18). இவர் பொத்தேரியில் உள்ள தனியார் கல்லூரியில் படித்து வந்தார்.

நண்பர்களான இருவரும் நேற்று காலை தாம்பரம்-மதுரவாயல் பைபாஸ் சாலையில் மோட்டார்சைக்கிளில் தாம்பரம் நோக்கி சென்றனர். மோட்டார்சைக்கிளை ஷாம் சுந்தர் ஓட்டினார். இரும்புலியூர் மேம்பாலம் அருகே சென்றபோது திடீரென நிலைதடுமாறி இருவரும் கீழே விழுந்தனர்.

இதில் தலையில் பலத்த காயம் அடைந்த ஷாம் சுந்தர் சம்பவ இடத்திலேயே பலியானார். பரத் படுகாயத்துடன் உயிருக்கு போராடிக்கொண்டிருந்தார். இதுகுறித்து தகவல் அறிந்த குரோம்பேட்டை போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று பரத்தை மீட்டு குரோம்பேட்டையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

பின்னர் ஷாம் சுந்தரின் உடல் பிரேத பரிசோதனைக்காக குரோம்பேட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இதுகுறித்து குரோம்பேட்டை போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். 
Tags:    

Similar News