செய்திகள்

அணைக்கட்டு தனியார் பள்ளி காவலாளியை கட்டிப்போட்டு ரூ.1 லட்சம் கொள்ளை

Published On 2018-07-31 08:22 GMT   |   Update On 2018-07-31 08:22 GMT
அணைக்கட்டு தனியார் பள்ளியில் காவலாளியை கட்டிப்போட்டு ரூ.98 ஆயிரத்தை கும்பல் கொள்ளையடித்து சென்று விட்டனர்.
அணைக்கட்டு:

அணைக்கட்டு காந்திரோட்டில் தனியார் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி உள்ளது. இங்கு 1300 மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர்.

சின்ன அணைக்கட்டு பகுதியை சேர்ந்த பெருமாள் (வயது 45) என்பவர் பள்ளியில் இரவு நேர காவலாளியாக வேலைபார்த்து வருகிறார். நேற்று இரவு பெருமாள் பணியில் இருந்தார்.

நள்ளிரவு 4 பேர் கும்பல் பள்ளி மெயின் கதவு பூட்டை உடைத்து உள்ளே சென்றனர். காவலாளி பெருமாளை தாக்கி நாற்காலியில் அவரை கட்டிப்போட்டனர்.

அவர் வைத்திருந்த ரூ.8 ஆயிரம் பணத்தை பறித்தனர். பின்னர் பள்ளி அலுவலக கதவு பூட்டை உடைத்து உள்ளே சென்றனர்.

அங்கு பீரோவில் இருந்த ரூ.90 ஆயிரம் பணத்தை கொள்ளையடித்தனர். மேலும் சி.சி.டி.வி. கேமிரா காட்சிகள் பதிவு செய்யும் எந்திரம் ஆகியவற்றை எடுத்து சென்று விட்டனர்.

இன்று காலையில் பள்ளிக்கு நடைபயிற்சிக்கு சென்றவர்கள் காவலாளி பெருமாளை கட்டிபோட்டிருந்ததை கண்டனர்.

அவர்கள் கட்டவிழ்த்து விட்ட பின்னர் கொள்ளை சம்பவம் பற்றி பள்ளி நிர்வாகத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. பள்ளி தாளாளர் அரி அணைக்கட்டு போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று விசாரித்தனர். கைரேகைகள் சேகரிக்கபட்டன.

இந்த சம்பவம் அணைக்கட்டில் பரபரப்பை ஏற்படுத்தியது. கொள்ளை கும்பலை பிடிக்க போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
Tags:    

Similar News