செய்திகள்
திருவட்டார் அருகே ஓய்வு பெற்ற ஆசிரியையிடம் 7 பவுன் நகை பறிப்பு
நடந்து சென்ற ஓய்வு பெற்ற ஆசிரியையிடம் 7 பவுன் நகையை மோட்டார் சைக்கிளில் வந்த மர்ம நபர்கள் பறித்து சென்றனர்.
திருவட்டார்:
திருவட்டார் அருகே மேக்காமண்டபம் மயிலோடும் பாறை விளையைச் சேர்ந்தவர் சில்வான்ஸ். இவரது மனைவி ஜெசி ஜெயனேட் (வயது 78), ஓய்வு பெற்ற ஆசிரியை. இவர், அந்த பகுதியில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த மர்மநபர் ஒருவர் ஜெசி ஜெயனேட் கழுத்தில் கிடந்த 7 பவுன் நகையை பறித்தார்.
உடனே அவர், திருடன்... திருடன்... என கூச்சலிட்டார். அதற்குள் மர்மநபர் நகையை பறித்து விட்டு தப்பியோடி விட்டார். இது குறித்து திருவட்டார் போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினார்கள். ஜெசி ஜெயனேட்டிடம் கொள்ளையன் குறித்த அடையாளங்களை போலீசார் கேட்டறிந்தனர். பின்னர் அந்த பகுதியில் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். தீவிர வாகன சோதனையும் நடத்தப்பட்டது. ஆனால் கொள்ளையர்கள் யாரும் சிக்கவில்லை.
செயின் பறிப்பு குறித்து ஜெசி ஜெயனேட் திருவட்டார் போலீசில் புகார் செய்தார். புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.