செய்திகள்

ஈரோடு அருகே ஓடும் ரெயிலில் பயணிகளிடம் திருட்டு

Published On 2018-07-26 11:00 GMT   |   Update On 2018-07-26 11:00 GMT
ஓடும் ரெயிலில் பயணிகளிடம் திருடிய மர்ம நபர் குறித்து போலீசில் புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது. போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

ஈரோடு:

ஈரோடு ரெயில் நிலையத்தில் தொடர்ந்து பயணிகளிடம் திருட்டு சம்பவங்கள் நடந்து வருகிறது.

ரெயில் நிலைய பிளாட் பாரத்தில் படுத்திருக்கும் பயணிகளிடம் சக பயணிகள் போல் படுத்து அவர்களின் பை மற்றும் செல்போன் போன்றவற்றை திருடிக் கொண்டு சென்று விடுகின்றனர். இதேபோல் ஓடும் ரெயிலிலும் இரவில் அயர்ந்து தூங்கும் பயணிகளிடம் கொள்ளையர்கள் கைவரிசை காட்டி வருகிறார்கள்.

கோவை வரதராஜபுரம் இந்திரா கார்டன் விவேகானந்தா நகரைச் சேர்ந்தவர் சீனிவாசன் (வயது 63). இவர் மனைவி, மகனுடன் தஞ்சை சென்று இருந்தார்.

பின்னர் நேற்று இரவு தஞ்சாவூரிலிருந்து கோவை எக்ஸ்பிரஸ் ரெயிலில் முன் பதிவு பெட்டியில் பயணம் செய்தனர். ஈரோடு அருகே நள்ளிரவில் ரெயில் வரும் போது அயர்ந்து தூங்கினார்கள்.

அப்போது சீனிவாசனின் பையை ஒரு மர்ம நபர் நைசாக திருடி சென்று விட்டார். அதில் ரூ 7 ஆயிரம் மதிப்புள்ள செல்போன், ரூ 28 ஆயிரம் மதிப்புள்ள ஐ பேடு, ரூ 8 ஆயிரம் மதிப்புள்ள கேமராவும் இருந்தது. இவை அனைத்தும் திருடு போய் விட்டன.

இந்த ரெயிலின் அடுத்த பெட்டியில் கோவை காந்திபுரம் 100 அடி ரோடு ராஜா நாயுடு பகுதியை சேர்ந்த ரவிச்சந்திரன் மகள் அம்சப் ரியா (வயது 24) பயணம் செய்தார்.

இவரும் தூங்கி சமயத்தில் அவரிடம் இருந்த ரூ 17 ஆயிரம் மதிப்புள்ள விலை உயர்ந்த ஒரு செல்போன் மற்றும் ரூ.10 ஆயிரம் மதிப்புள்ள மற்றொரு செல்போனையும் மர்ம நபர் திருடி சென்று விட்டார்.

இந்த இரண்டு சம்பவத்திலும் ஒரே நபர்தான் கைவரிசை காட்டி இருக்கக்கூடும் எனத் தெரியவருகிறது. ரெயில் ஈரோடு வந்ததும் இருவரும் ஈரோடு ரெயில் நிலைய போலீசில் 2 பேரும் புகார் செய்தனர். அதன் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News