செய்திகள்

மாங்காடு அருகே பள்ளி பஸ்சில் மாணவியிடம் சில்மி‌ஷம்- உதவியாளருக்கு தர்மஅடி

Published On 2018-07-26 09:44 GMT   |   Update On 2018-07-26 09:44 GMT
மாங்காடு அருகே பள்ளி பஸ்சில் உதவியாளர்களே மாணவிகளிடம் சில்மி‌ஷத்தில் ஈடுபட்ட சம்பவம் பெற்றோரை அதிர்ச்சி அடைய செய்துள்ளது.
மாங்காடு:

மாங்காடு அடுத்த கொளப்பாக்கம், பல்லாவரம் மெயின்ரோட்டில் ஒமேகா இண்டர்நே‌ஷனல் பள்ளி உள்ளது. இங்கு மாங்காடு, போரூர், குன்றத்தூர் பகுதிகளை சேர்ந்த 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவ- மாணவிகள் படித்து வருகிறார்கள். பெரும்பாலான மாணவ- மாணவிகள் பள்ளி பஸ்சில் வந்து செல்கின்றனர்.

இன்று காலை வழக்கம் போல் கொளப்பாக்கம் பகுதியில் உள்ள மாணவர்களை ஏற்றிச் செல்வதற்காக பள்ளி பஸ் வந்தது. அதில் உதவியாளராக பாஸ்கர் என்பவர் இருந்தார்.

அப்போது கொளப்பாக்கத்தை சேர்ந்த எல்.கே.ஜி. மாணவி ஒருவர் பள்ளி பஸ்சில் செல்ல மறுத்தார். பெற்றோர் விசாரித்தபோது பஸ்சில் உள்ள உதவியாளர் பாஸ்கர், சிறுமியிடம் சில்மி‌ஷத்தில் ஈடுபட்டு வந்தது தெரிந்தது.

அதிர்ச்சி அடைந்த மாணவியின் பெற்றோர் மற்றும் அக்கம் பக்கத்தினர் பஸ்சில் இருந்த உதவியாளர் பாஸ்கரை சுற்றி வளைத்து சரமாரியாக தாக்கினர். பின்னர் அவரை பள்ளி நிர்வாகிகளிடம் ஒப்படைத்து வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

இதுபற்றி தகவல் அறிந்ததும் ஏராளமான மாணவ- மாணவிகளின் பெற்றோர் அங்கு திரண்டனர். அவர்கள் பள்ளியை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

பஸ்சில் ஏறி, இறங்கும் பல சிறுமிகளிடம் உதவி செய்வதுபோல் நடித்து பாஸ்கர் சில்மி‌ஷத்தில் ஈடுபட்டு வந்தது விசாரணையில் தெரிய வந்தது. அவரிடம் மாங்காடு போலீஸ் இன்ஸ்பெக்டர் கிருஷ்ணகுமார் விசாரணை நடத்தி வருகிறார்.

இதேபோல் மற்றொரு உதவியாளர் மீதும் மாணவிகளின் பெற்றோர் புகார் தெரிவித்து உள்ளனர். அவரிடமும் விசாரணை நடத்த போலீசார் முடிவு செய்து இருக்கிறார்கள்.

பள்ளி பஸ்சில் உதவியாளர்களே மாணவிகளிடம் சில்மி‌ஷத்தில் ஈடுபட்ட சம்பவம் பெற்றோரை அதிர்ச்சி அடைய செய்துள்ளது. #tamilnews
Tags:    

Similar News