செய்திகள்

11 வயது சிறுமிக்கு பாலியல் கொடுமை- 17 பேருக்கு 5 நாள் போலீஸ் காவல்

Published On 2018-07-26 05:05 GMT   |   Update On 2018-07-26 05:05 GMT
சென்னையில் சிறுமி பாலியல் கொடுமை வழக்கில் கைதான 17 குற்றவாளிகளை இன்று முதல் 5 நாட்கள் போலீஸ் காவலில் எடுத்து விசாரணை நடத்த மகளிர் நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. #chennaigirlharassment
சென்னை:

சென்னை அயனாவரத்தில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் 11 வயது சிறுமி கற்பழிக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இது தொடர்பாக, அந்த குடியிருப்பில் லிப்ட் ஆபரேட்டராக பணிபுரிந்த ரவிகுமார், காவலாளிகள் அபிஷேக், சுகுமாறன் உள்பட 17 பேர் கைது செய்யப்பட்டனர். போலீஸ் விசாரணையில் இவர்கள் 6 மாதங்களுக்கும் மேலாக அந்த சிறுமியை மிரட்டி கற்பழித்து வந்தது தெரிய வந்தது.

கைதான 17 பேரும் சென்னை மகளிர் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டனர். பின்னர் அனைவரும் புழல் சிறையில் தனி அறையில் அடைக்கப்பட்டனர். வருகிற 31-ந்தேதி வரை இவர்களை காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

குற்றவாளிகளை உறுதி செய்வதற்கான அடையாள அணிவகுப்பு புழல் சிறையில் நேற்று நடந்தது. எழும்பூர் கோர்ட்டு மாஜிஸ்திரேட்டுகள் ரோகித்துரை, கலைபொன்னி ஆகியோர் முன்னிலையில் இது நடைபெற்றது.

கற்பழிப்பு குற்றவாளிகளுடன் அதே வயதுடைய வேறு குற்றவாளிகள் 10 பேரும் நிறுத்தப்பட்டனர். இதில் குற்றவாளிகள் 17 பேரையும் சிறுமி அடையாளம் காட்டினாள்.

இந்த நிலையில், குற்றவாளிகள் 17 பேரையும், காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கோரி, மகளிர் நீதிமன்றத்தில் போலீசார் மனு தாக்கல் செய்தனர். இதை ஏற்ற மகளிர் நீதிமன்றம், கற்பழிப்பு குற்றவாளிகளை 5 நாட்கள் போலீஸ்காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி வழங்கியது.

இதையடுத்து, குற்றவாளிகள் 17 பேரையும் போலீசார் காவலில் எடுத்து விசாரிக்கிறார்கள். அவர்களிடம் இன்று முதல் 5 நாட்கள் விசாரணை நடத்துகிறார்கள். #chennaigirlharassment
Tags:    

Similar News