செய்திகள்

மதுரையில் தனியார் நிறுவன ஊழியர் கொலை: நண்பர்களுக்கு கத்திக்குத்து

Published On 2018-07-23 09:45 GMT   |   Update On 2018-07-23 09:45 GMT
நண்பர்களுக்கிடையே ஏற்பட்ட தகராறில் தனியார் நிறுவன ஊழியர் கொலை செய்யப்பட்டார். 2 பேர் கத்தியால் குத்தப்பட்டு ஆபத்தான நிலையில் உள்ளனர்.

மதுரை:

மதுரை தெற்குவாசல் போலீஸ் சரகத்துக்குட்பட்ட காஜா தெருவை சேர்ந்தவர் ஜாகீர்உசேன். இவரது மகன் பஷீர் முகமது (வயது 26). இவர் கே.கே. நகர் 80 அடி ரோட்டில் உள்ள மோட்டர் சைக்கிள் விற்பனையகத்தில் வேலை பார்த்து வந்தார்.

விடுமுறை நாள் என்பதால் நேற்று மாலை பஷீர் முகமது தனது நண்பர்கள் பெருங்குடி பள்ளி வாசல்தெருவை சேர்ந்த சுல்தான் அலாவுதீன், வில்லாபுரம் ஹவுசிங் போர்டை சேர்ந்த வீரார் அப்துல்லா (28), தெற்கு மாசி வீதி முகமது யூசுப் (25) மற்றும் சிலருடன் சோலையழகுபுரத்தில் உள்ள டாஸ்மாக் பாரில் மதுகுடிக்க சென்றார்.

அப்போது சுற்றுலா செல்வது தொடர்பாக பஷீர்முகமதுவுக்கும், சுல்தான் அலாவுதீனுக்கு வாக்குவாதம் ஏற்பட்டது. இருவரும் தகாத வார்த்தைகளால் திட்டிக் கொண்டனர். இதனால் சுல்தான் அலாவுதீன் அங்கிருந்து சென்றுவிட்டார்.

மதுகுடித்துவிட்டு பஷீர்முகமது, நண்பர்கள் வீரார் அப்துல்லா, முகமது யூசுப் ஆகியோர் பாண்டிய வேளாளர் தெரு சந்திப்பில் வந்து கொண்டிருந்தனர். அப்போது அங்கு நின்று கொண்டிருந்த சுல்தான் அலாவுதீன் மீண்டும் அவர்களிடம் வாக்கு வாதத்தில் ஈடுபட்டார்.

இதில் ஆத்திரமடைந்த சுல்தான் அலாவுதீன் தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து பஷீர் முகமதுவை கொடூரமாக குத்தினார். இதை தடுக்க வந்த வீரார் அப்துல்லா, முகமது யூசுப்புக்கும் கத்திக் குத்து விழுந்தது.

ரத்த வெள்ளத்தில் கிடந்த 3 பேரையும் அங்கிருந்த வர்கள் மீட்டு ஆம்புலன்சு மூலம் மதுரை அரசு ஆஸ்பத் திரிக்கு அனுப்பிவைத்தனர். ஆனால் வழியிலேயே பஷீர் முகமது பரிதாபமாக இறந்தார். மற்ற 2 பேரும் ஆபத்தானநிலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்த சம்பவம் குறித்து தெற்குவாசல் போலீசார் வழக்குப்பதிவு செய்து தலைமறைவான சுல்தான் அலாவுதீனை தேடி வருகின்றனர்.

Tags:    

Similar News