செய்திகள்
நூற்றுக்கும் மேற்பட்ட வழக்கு ஆவணங்கள் மாயம் - பெர்முடா முக்கோணமா? என நீதிபதி கேள்வி
ஓய்வு பெற்ற நீதிபதி மதிவாணன் விசாரித்த நூற்றுக்கும் மேற்பட்ட வழக்குகளின் ஆவணங்கள் மாயமாகியுள்ள நிலையில், இது தொடர்பாக சிபிஐ விசாரிக்க நீதிபதி ஜெயச்சந்திரன் உத்தரவிட்டுள்ளார். #MadrasHC #CBI
சென்னை:
சென்னை ஐகோர்ட் நீதிபதியாக இருந்து ஓய்வுப்பெற்ற டி.மதிவாணன், தனது பணிக்காலத்தில் விசாரித்த 100-க்கும் மேற்பட்ட வழக்குகளின் ஆவணங்கள் மாயமானதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதையடுத்து, ஐகோர்ட் பதிவுத்துறை விசாரணையில், வழக்கு ஆவணங்கள் நீதிபதியின் வீட்டிற்கு எடுத்துச் செல்லப்பட்டதும் அதன்பின்னர் காணாமல் போய் விட்டதும் தெரியவந்தது.
இதையடுத்து இந்த வழக்குகளின் ஆவணங்களை இருதரப்பினரிடம் இருந்து பெற்று, மறு கட்டமைப்பு செய்யும்படி பதிவுத்துறைக்கு தலைமை நீதிபதி உத்தரவிட்டார்.
இந்நிலையில், அதில் சில வழக்குகள் நீதிபதி ஜி.ஜெயச்சந்திரன் அமர்வின் முன்பு இன்று விசாரணைக்கு வந்தன. அப்போது, பெர்முடா முக்கோணத்தில் மாயமாகும் கப்பல்கள் போல, நீதிமன்றத்தில் இருந்து ஆவணங்கள் மாயமாகியுள்ளதாக நீதிபதி வேதனையுடன் தெரிவித்தார்.
நீதிபதியின் வீட்டிற்கு எடுத்துச் செல்லப்பட்ட 100-க்கும் மேற்பட்ட வழக்குகளின் ஆவணங்கள், மாயமாகியுள்ளதால் இது குறித்து சி.பி.ஐ. விசாரிக்க வேண்டும் என அவர் உத்தரவிட்டார்.