செய்திகள்

போலீசுக்கு தெரியாமல் மனைவி உடலை ரகசியமாக எரிக்க முயன்ற கணவன்

Published On 2018-07-14 16:50 GMT   |   Update On 2018-07-14 16:50 GMT
ஆம்பூரில் போலீசுக்கு தெரியாமல் மனைவியின் உடலை எரிக்க முயன்ற கணவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

ஆம்பூர்:

ஆம்பூர் அடுத்த வடகரை கிராமத்தை சேர்ந்தவர் பிரகாசம். முடி திருத்தும் தொழிலாளி. இவருடைய மனைவி கண்ணகி (வயது 40). இவர்களுக்கு 20 ஆண்டுக்கு முன்பு திருமணம் நடந்தது. ஒரு மகள் உள்ளார்.

இந்த நிலையில், ஆண் வாரிசுக்காக 2-வது திருமணம் செய்ய பிரகாசம் முடிவு செய்தார். இதற்கு, மனைவி கண்ணகி எதிர்ப்பு தெரிவித்தார்.

இதுதொடர்பாக அடிக்கடி கணவன்-மனைவி இடையே தகராறு ஏற்பட்டு வந்தது. நேற்று முன்தினம் நள்ளிரவு தூக்கில் தொங்கிய நிலையில் கண்ணகி மர்மமாக இறந்து கிடந்தார்.

பிரகாசம் நேற்று காலை அக்கம், பக்கத்தினர் மற்றும் உறவினர்களிடம் மனைவி கண்ணகி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டதாக கூறினார்.

இதையடுத்து, உறவினர்கள் கூடி உடலை எரிப்பதற்கான இறுதி சடங்கு ஏற்பாடுகளை செய்தனர். உடலை பாடை கட்டி தூக்கி சென்றனர்.

இதுப்பற்றி கண்ணகியின் அண்ணன், உமராபாத் போலீசில் புகார் அளித்தார். போலீசார் விரைந்து வந்து உடலை மீட்டு பிரேத பரி சோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

மேலும், இதுசம்பந்தமாக கிராம நிர்வாக அலுவலர் கொடுத்த புகாரின் பேரில் மனைவி உடலை ரகசியமாக எரிக்க முயன்றது உள்ளிட்ட 2 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்தனர்.

மேலும், 2-வது திருமண ஆசையில் கண்ணகி கொலை செய்யப்பட்டாரா? என்பது குறித்தும் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News