செய்திகள்

வேலைவாய்ப்புக்கான ஸ்டார்ட் அப் கொள்கை- திறன் மேம்பாட்டு கருத்தரங்கம்

Published On 2018-07-10 19:49 IST   |   Update On 2018-07-10 19:49:00 IST
சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில், வேலைவாய்ப்புக்கான ஸ்டார்ட் அப் கொள்கை மற்றும் திறன் மேம்பாடு தொடர்பான கருத்தரங்கை கவர்னர் பன்வாரிலால் புரோகித் தொடங்கி வைத்தார்.
சென்னை:

சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் வேலைவாய்ப்புக்கான தொடக்கநிலைக் கொள்கை மற்றும் திறன் மேம்பாடு தொடர்பான ஒரு நாள் கருத்தரங்கம் இன்று நடைபெற்றது. மாநில பல்கலைக்கழகங்கள் சார்பில் நடைபெற்ற இந்த கருத்தரங்கை கவர்னர் பன்வாரிலால் புரோகித் தொடங்கி வைத்து உரையாற்றினார். அப்போது பல்கலைக்கழகங்களின் பணி, மாணவர்களின் வேலைவாய்ப்பு மற்றும் திறன் மேம்பாடு தொடர்பான பல்வேறு ஆலோசனைகளை வழங்கினார்.

தமிழக உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் சிறப்புரையாற்றினார். அவர் பேசும்போது, உயர்கல்வியில் தமிழகம் முதன்மை இடம் பெற்று திகழ்வதாகவும், தொழில்துறையில் வளம்கொண்ட மாநிலமாக திகழ்வதாகவும் கூறினார்.

‘நமது இளைஞர்களுக்கு கல்வியுடன் தொழில் திறன் பயிற்சியும் அளிக்க வேண்டும் என்பது அவசியம். அந்த பயிற்சி நமது தேவைக்கும் சூழலுக்கும் ஏற்றதாக இருக்க வேண்டும். விரைவாக வழங்கக்கூடியதாகவும் இருக்க வேண்டும். இதனை திட்டமிட்டு வடிவமைக்கக் கூடிய பொறுப்பு நமது பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர்களுக்கும், கல்வியாளர்களுக்கும், தொழில்துறை நிறுவனங்களைச் சேர்ந்தவர்களுக்கும் தான் உள்ளது.

தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழகம் இளைஞர்களின் வேலைவாய்ப்புகளை அதிகரிக்கும் வகையில் அவர்களுக்கு ஏற்ற திறன் பயிற்சிகளை அளித்து வருகிறது’ என்றும் அமைச்சர் பேசினார்.

கருத்தரங்கில் அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் சூரப்பா, உயர்கல்வித்துறை செயலாளர் சுனில் பாலிவால் மற்றும் மாநில பல்கலைக்கழகங்களின் துணை வேந்தர்கள் பங்கேற்றனர். #AnnaUniversityConference
Tags:    

Similar News