செய்திகள்

நீட் தேர்வில் அதிக மதிப்பெண் எடுத்த எனக்கு அழைப்பு இல்லை - மாற்றுத்திறனாளி மாணவி கண்ணீர்

Published On 2018-07-01 17:42 IST   |   Update On 2018-07-01 17:42:00 IST
நீட் தேர்வில் அதிக மதிப்பெண் எடுத்த எனக்கு அழைப்பு இல்லை என மாற்றுத் திறனாளி மாணவி தனலட்சுமி புகார் செய்தார். #NeetExam

சென்னை:

மருத்துவ படிப்புக்கான கலந்தாய்வு தொடங்கியது. முதல் நாளான இன்று சிறப்பு மாணவர்களுக்கான கலந்தாய்வு நடைபெற்றது.

அதில் ‘நீட்’ தேர்வில் தன்னைவிட குறைந்த மதிப்பெண் பெற்றவர்கள் கலந்தாய்வுக்கு அழைக்கப்பட்டுள்ளனர். ஆனால் அதிக மார்க் எடுத்த எனக்கு அழைப்பு இல்லை என மாற்றுத் திறனாளி மாணவி தனலட்சுமி புகார் செய்தார்.

இவர் சென்னை மணலியை சேர்ந்தவர். தந்தை ராதாகிருஷ்ணன் மர அறுவை மில்லில் வேலை செய்கிறார். கால் ஊனமுற்ற இவர் டாக்டராக வேண்டும் என்ற லட்சிய கனவுடன் படித்து கடந்த ஆண்டு பிளஸ்-2 தேர்வில் 1114 மதிப்பெண் எடுத்தார். அப்போது நடத்தப்பட்ட ‘நீட்’ தேர்வில் அவரால் 98 மதிப்பெண் மட்டுமே பெற முடிந்தது. எனவே அவரால் மருத்துவ படிப்பில் சேர முடியவில்லை.

எனவே இந்த ஆண்டு நன்றாக படித்து மீண்டும் ‘நீட்’ தேர்வு எழுதினார். அவர் 263 மதிப்பெண் பெற்றார். எனவே சிறப்பு பிரிவில் தனக்கு இடம் கிடைக்கும் என்ற நம்பிக்கையில் இருந்தார்.

ஆனால் கலந்தாய்வில் பங்கேற்க இவருக்கு அழைப்பு வரவில்லை. எனவே இன்று தனது பெற்றோருடன் கலந்தாய்வு நடைபெறும் ஓமந்தூரார் தோட்டத்தில் உள்ள பல்நோக்கு அரசு மருத்துவமனைக்கு வந்தார். அப்போது அவர் நிரூபர்களிடம் கூறியதாவது:-

‘‘மாற்று திறனாளிகள் பிரிவினருக்கு ‘நீட்’ தேர்வில் 106 முதல் 208 மதிப்பெண் பெற்றவர்கள் கலந்தாய்வில் கலந்துகொள்ள அழைப்பு அனுப்பப்பட்டுள்ளது. ஆனால் 263 மதிப்பெண் பெற்ற எனக்கு அழைப்பு வரவில்லை. இந்த முறையாவது மருத்துவ படிப்பில் சேர்ந்து படித்து டாக்டராக வேண்டும் என்ற கனவுடன் இருந்தேன். ஆனால் அழைப்பு அனுப்பப்படாதது ஏன் என தெரியவில்லை. எனவே அரசும், அதிகாரிகளும் தலையிட்டு கலந்தாய்வில் நான் பங்கேற்க துணை புரிய வேண்டும்’’ என கண்ணீருடன் தெரிவித்தார். #NeetExam

Tags:    

Similar News