செய்திகள்
திருமண ஆசைகாட்டி 9-ம் வகுப்பு மாணவியை கடத்திய வாலிபர் கைது
மதுரையில் திருமண ஆசைகாட்டி 9-ம் வகுப்பு மாணவியை கடத்திய வாலிபர் கைது செய்யப்பட்டார்.
பேரையூர்:
மதுரை பெருங்குடி பகுதியைச் சேர்ந்த 14 வயதுடைய மைனர் பெண் திருப்பாலையில் உள்ள பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வருகிறார்.
சம்பவத்தன்று வீட்டில் இருந்த இவர் திடீரென மாய மானார். பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை.
இதுகுறித்து அவரது பெற்றோர் பெருங்குடி போலீசில் புகார் செய்தனர். அதில், மேலூர் அருகே உள்ள பட்டிணம் கிராமத்தைச் சேர்ந்த நந்தகுமார் மகன் பெரியசாமி (வயது20) என்பவர் திருமண ஆசை காட்டி மகளை கடத்தி சென்று விட்டதாக குறிப்பிட்டு இருந்தனர்.
இதன் அடிப்படையில் பெருங்குடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தியதில் இருவரும் வேலூர் மாவட்டம் ஆம்பூரில் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. உடனே போலீசார் விரைந்து சென்று இருவரையும் அழைத்து வந்தனர்.
பின்னர் மைனர் பெண் காப்பகத்தில் ஒப்படைக்கப்பட்டார். அவரை கடத்திய பெரியசாமி கைது செய்யப்பட்டார்.