செய்திகள்

அமைச்சர் ஜெயக்குமார் வீட்டில் நண்டு விடும் போராட்டம் - இளம்பெண் கைது

Published On 2018-06-29 13:57 IST   |   Update On 2018-06-29 13:57:00 IST
சேதம் அடைந்த வீடுகளை பார்வையிடவில்லை, உதவிகளும் செய்ய முன்வரவில்லை என்பதை கண்டித்து அமைச்சர் ஜெயக்குமார் வீட்டில் நண்டு விடும் போராட்டத்தில் ஈடுப்பட்ட இளம்பெண்ணை போலீசார் கைது செய்தனர். #MinisterJayakumar

சென்னை:

சென்னை பட்டினப்பாக்கத்தில் ஏற்பட்ட திடீர் கடல் அரிப்பில் சில வீடுகள் சேதம் அடைந்தன.

சேதம் அடைந்த வீடுகளை பார்வையிடவில்லை. உதவிகளும் செய்ய முன்வரவில்லை என்பதை கண்டித்து பட்டினப்பாக்கத்தில் குடியிருக்கும் அமைச்சர் ஜெயக்குமார் வீட்டில் ஒரு பெண் நண்டுவிடும் போராட்டத்தில் ஈடுபட்டார்.

இந்த போராட்டத்தை நடத்துவதற்காக அண்ணா நகரைச் சேர்ந்த நர்தா நந்த குமார் என்ற இளம்பெண் ஒரு பையில் சில நண்டுகளுடன் ஜெயக்குமார் வீட்டுக்கு வந்தார்.

தன்னந்தனி பெண்ணாக வந்ததால் அவர் தெருவில் நடந்து செல்லும் பெண் என்று கருதி விட்டனர். ஆனால் திடீரென்று பையில் இருந்த நண்டை எடுத்து அமைச்சர் ஜெயக்குமார் வீட்டில் விட முயன்றார்.

உடனே அங்கு பாதுகாப்புக்கு நின்ற போலீசார் நர்மதா நந்தகுமாரை கைது செய்து நண்டுகளையும் பறிமுதல் செய்தனர். பின்னர் அவரை போலீஸ் நிலையம் கொண்டு சென்றனர்.

அதற்குள் தகவல் அறிந்து ஜெயக்குமாரின் ஆதரவாளர்கள் திரண்டு வந்தனர். அவர்கள், “இது எதிர்க் கட்சிகளின் சதிவேலை. அவர்களின் தூண்டுதலின் பேரில்தான் அந்த பெண் போராட்டம் நடத்தி இருக்கிறார். அவரை கைது செய்ய வேண்டும்” என்று கோ‌ஷம் எழுப்பினர்.

இதனால் ஜெயக்குமார் வீட்டுப் பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
#MinisterJayakumar

Tags:    

Similar News