செய்திகள்

அரசு வக்கீல் நோட்டீசுக்கு விளக்கம் அளிப்பேன் - தங்கதமிழ்ச்செல்வன்

Published On 2018-06-29 06:55 GMT   |   Update On 2018-06-29 06:55 GMT
நீதிபதி தீர்ப்பை விமர்சனம் செய்து கருத்து தெரிவித்திருந்த எனக்கு அனுப்பப்பட்டுள்ள நோட்டீசுக்கு விளக்கம் அளிப்பேன் என்று தங்க தமிழ்ச் செல்வன் கூறினார்.
சென்னை:

நீதிபதி தீர்ப்பை விமர்சனம் செய்து கருத்து தெரிவித்திருந்த தங்க தமிழ்ச்செல்வனுக்கு விளக்கம் கேட்டு நோட்டீசு அனுப்பப்பட்டுள்ளது.

இதுபற்றி தங்க தமிழ்ச் செல்வனிடம் கேட்டபோது அவர் கூறியதாவது:-

சட்டசபையில் நான் அரசுக்கு ஆதரவாகத்தான் வாக்களித்தேன். அரசுக்கு எதிராக வாக்களித்தவர் ஓ.பன்னீர்செல்வம். இது உலகத்துக்கே தெரியும். ஓ.பன்னீர்செல்வம் உள்பட 11 பேர் மாத்தி ஓட்டு போட்டார்கள்.

இவர்கள் செய்தது தவறு என்று நீதிமன்றம் கூறி இருந்தால் தீர்ப்பை வரவேற்று இருப்பேன். அதை சொல்லாமல் தீர்ப்பு கூறுகிறார்கள்.

உண்மையை சொன்னால் கோர்ட்டு அவமதிப்பு என்று எனக்கு நோட்டீசு அனுப்புகிறார்கள். நான் அதற்கு பயப்படவில்லை. விளக்கம் அளிப்பேன். நான் அரசு வக்கீலை பார்த்து கேட்கிறேன்.

சட்டம் அனைவருக்கும் சமம். பொதுமக்கள் இறுதியாக நம்பும் இடம் நீதிமன்றம்தான். எங்களுக்கு சாதகமாக தீர்ப்பு வேண்டும் என்று நான் கேட்கவில்லை. ஆனால் சட்டமன்றத்தில் 11 பேர் அரசாங்கத்தை கவிழ்க்க, எதிர்த்து வாக்களித்தார்கள்.

அவர்கள் செய்தது சரியா? தவறா? என்று நீதிமன்றம் ஏன் கூறவில்லை. அதை சொல்லாமல் தீர்ப்பு கூறினால் எப்படி?

நீதிபதி தீர்ப்பை விமர்சிக்க கூடாது என்கிறார்கள். அப்படியானால் நீதிபதியாக இருந்த கர்ணனுக்கு எதிராக சுப்ரீம் கோர்ட்டு நீதிபதிகள் 4 பேர் கருத்து தெரிவித்தார்களே? அவர்களுக்கு ஏன் நோட்டீசு அனுப்பவில்லை. சுப்ரீம்கோர்ட்டு நீதிபதிகள் என்பதால் பயமா?

நான் சாதாரண குடிமகன் என்பதால் எனக்கு நோட்டீசா? என்னை மிரட்டி பார்க்கிறார்களா? சட்டம் எல்லோருக்கும் சமம்.

எனக்கு நோட்டீசு வந்தால் இதையெல்லாம் விளக்கமாக எடுத்து சொல்வேன்.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

Similar News