செய்திகள்

தாராபுரம் அருகே சுற்றுலா வேன் மோதி வாலிபர் பலி

Published On 2018-06-22 11:30 GMT   |   Update On 2018-06-22 11:30 GMT
தாராபுரம் அருகே சுற்றுலா வேன் மோதி வாலிபர் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தாராபுரம்:

புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே உள்ள பெரியலூரை சேர்ந்தவர் மணிகண்டன் (வயது 20). மதுரை மாவட்டம் திருமங்கலத்தை சேர்ந்தவர் தங்கவேல் (27). கேரள மாநிலம் மூணாரை சேர்ந்தவர் ரெஜிபிலிப் (28). இவர்கள் 3 பேரும் திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தில் தங்கி இருந்து அங்குள்ள காற்றாலையில் ஊழியர்களாக வேலை பார்த்து வந்தனர்.

இன்று காலை இவர்கள் 3 பேரும் ஒரு மோட்டார் சைக்கிளில் தாராபுரம்- பொள்ளாச்சி ரோட்டில் சென்றனர். மோட்டார் சைக்கிளை மணிகண்டன் ஓட்டிச் சென்றார். செட்டிப்பாளையம் அருகே சென்ற போது பொள்ளாச்சியில் இருந்து கரூர் நோக்கி சென்ற சுற்றுலா வேன் மோட்டார் சைக்கிள் மீது எதிர்பாராத விதமாக மோதியது.

இதில் மோட்டார் சைக்கிளில் சென்ற 3 பேரும் பலத்த காயம் அடைந்து உயிருக்கு போராடினர். இதனை பார்த்த அந்த வழியாக சென்றவர்கள் 3 பேரையும் மீட்டு தாராபுரம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் செல்லும் வழியிலேயே மணிகண்டன் பரிதாபமாக இறந்தார்.

படுகாயம் அடைந்த தங்கவேல், ரெஜி பிலிப் ஆகியோர் தாராபுரம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். இது குறித்து தாராபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Tags:    

Similar News