செய்திகள்

தமிழகத்தில் எய்ம்ஸ் எங்கே அமைப்பது? மேலும் 3 மாத அவகாசம் கேட்கும் மத்திய அரசு

Published On 2018-06-14 17:27 IST   |   Update On 2018-06-14 17:27:00 IST
தமிழகத்தில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்கும் இடத்தை தெரிவிக்கக் கோரி ஐகோர்ட் மதுரை கிளையில் தொடரப்பட்ட வழக்கில், மத்திய சுகாதாரத்துறை மேலும் 3 மாதம் அவகாசம் கேட்டு பதில் மனு தாக்கல் செய்துள்ளது. #AIMS
மதுரை:

தமிழகத்தில் எய்ம்ஸ் மருத்துவமனை அமையும் இடத்தை அறிவிக்க மத்திய அரசுக்கு உத்தரவிடக்கோரி கே.கே.ரமேஷ் என்பவர் மதுரை ஐகோர்ட்டில் பொதுநல வழக்கு தொடர்ந்தார். அந்த வழக்கை விசாரித்த ஐகோர்ட்டு, கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 31-ந்தேதிக்குள் தமிழகத்தில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைய உள்ள இடத்தை அறிவிக்க வேண்டும் என்று உத்தரவிட்டது.

ஆனால் எய்ம்ஸ் மருத்துவமனை அமைய உள்ள இடம் தொடர்பாக மத்திய அரசு எந்த அறிவிப்பையும் வெளியிடவில்லை. இதனால் மத்திய சுகாதாரத்துறை செயலாளர் மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கே.கே.ரமேஷ் மேலும் ஒரு மனு தாக்கல் செய்திருந்தார்.

அப்போது மத்திய அரசு தரப்பில் ஆஜரான வக்கீல், எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க தமிழகத்தில் ஈரோடு, மதுரை, தஞ்சை, புதுக்கோட்டை உள்ளிட்ட மாவட்டங்களில் 5 இடங்கள் தேர்வு செய்து தமிழக அரசு அறிக்கை அளித்தது. அந்த இடங்களை மத்திய குழுவினர் ஆய்வு செய்து உள்ளனர். அவற்றில் எந்த இடத்தில் மருத்துவமனை அமைய உள்ளது என முடிவு செய்ய கூடுதலாக காலஅவகாசம் வழங்க வேண்டும் என்று வாதாடினார்.

இதனை அடுத்து, ஜுன் 14-ம் தேதிக்குள் மருத்துவமனை அமைய உள்ள இடத்தை அறிவிக்க வேண்டும் என கூறி வழக்கை நீதிபதிகள் ஒத்தி வைத்தனர். இந்நிலையில், இடத்தை தேர்வு செய்ய மேலும் 3 மாதம் அவகாசம் வழங்க வேண்டும் என மத்திய சுகாதாரத்துறை சார்பில் இன்று பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

இது தொடர்பாக வரும் 18-ம் தேதி நடக்க உள்ள தேர்வுக்குழு கூட்டத்தில் முடிவெடுக்க உள்ளதாகவும் பதில் மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த வழக்கு வரும் 20-ம் தேதி விசாரணைக்கு வர உள்ளது. 
Tags:    

Similar News