செய்திகள்

மானாமதுரையில் வைகை ஆற்றில் மணல் குவாரி அமைக்க எதிர்ப்பு

Published On 2018-06-14 11:38 GMT   |   Update On 2018-06-14 11:38 GMT
மானாமதுரை வைகை ஆற்றில் மணல் குவாரி அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவிப்பது தொடர்பாக அனைத்துக் கட்சிகள் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
சிவகங்கை:

சிவகங்கை மாவட்டம் மானாமதுரை சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட வாகுடி, செய்களத்தூர், தெ.புதுக்கோட்டை, வழியாக செல்லும் வைகை ஆற்றில் 3 ஊர்களில் மணல் குவாரி அமைக்க அரசு ஒப்பந்த புள்ளி வெளியிட்டுள்ளதை கண்டித்து அனைத்துக் கட்சிகள் சார்பில் கூட்டம் நடைபெற்றது.

மானாமதுரை வைகை ஆற்றில் 30 குடிநீர் திட்டங்கள் மூலம் ஒரு நாளைக்கு ஒரு கோடி லிட்டர் தண்ணீர் எடுத்து குடிதண்ணீர் விநியோகம் செய்யப்படுகிறது.

இந்த திட்டத்தில் கடலாடி, அருப்புக்கோட்டை, மதுரை, சிவகங்கை உள்ளிட்ட 1,000-க்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு தண்ணீர் விநியோகம் செய்யப்படுகிறது.

மேலும் இந்த திட்டத்தை செயல்படுத்தினால் குடிநீர் திட்டம், விவசாயமும் பெரிய அளவில் பாதிக்கப்படும். எனவே வைகையில் மணல் அள்ள அனுமதித்ததை ரத்து செய்ய வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

கூட்டத்தில் ஏ.ஆர்.பி. முருகேசன், தி.மு.க. நகர் செயலாளர் பொன்னுச்சாமி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட செயற்குழு உறுப்பினர் வீரையா உள்பட பலர் கலந்து கொண்டனர்.
Tags:    

Similar News