செய்திகள்

எங்களுக்கு எந்த பின்னடைவும் இல்லை - தகுதி நீக்க வழக்கு தீர்ப்பு குறித்து தினகரன் கருத்து

Published On 2018-06-14 09:11 GMT   |   Update On 2018-06-14 09:11 GMT
எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்க வழக்கில் இரண்டு நீதிபதிகள் மாறுபட்ட தீர்ப்பை வழங்கியுள்ள நிலையில், இந்த தீர்ப்பால் தங்களுக்கு எந்த பின்னடைவும் இல்லை என டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார். #TTVDhinakaran #MLAsDisqualification
சென்னை:

டிடிவி தினகரன் ஆதரவாளர்களான 18 எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து சென்னை ஐகோர்ட்டில் தொடரப்பட்ட வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கப்பட்டது. தலைமை நீதிபதி இந்திரா பாணர்ஜி தகுதி நீக்கம் செல்லும் எனவும், நீதிபதி சுந்தர் தகுதி நீக்கம் செல்லாது எனவும் தீர்ப்பு அளித்தனர். 

இரண்டு நீதிபதிகள் அமர்வு மாறுபட்ட தீர்ப்பு வழங்கியுள்ளதால், மூன்றாவது நீதிபதி வழக்கை விசாரித்து இறுதி தீர்ப்பு வழங்குவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மூன்றாவது நீதிபதி யார் என்பது அடுத்த வாரம் அறிவிக்கப்படும் எனவும், அந்த நீதிபதியை மூத்த நீதிபதி குலுவாடி ரமேஷ் தேர்வு செய்வார் என்றும் கூறப்பட்டுள்ளது.

இந்நிலையில், மாறுபட்ட தீர்ப்பு குறித்து டிடிவி தினகரன் செய்தியாளர்களிடம் கூறியதாவது:-

புதுச்சேரி சட்டசபை சபாநாயகர் உத்தரவுக்கு எதிராக தீர்ப்பு வழங்கப்பட்டது. ஆனால், தற்போது சபாநாயகர் உத்தரவில் தலையிட முடியாது என தீர்ப்பு வழங்கப்படுகிறது. 50 சதவிகித வெற்றி எங்களுக்கு கிடைத்துள்ளது. விரைவில் 100 சதவிகித வெற்றி கிடைக்கும்.

தகுதி நீக்கம் செய்யப்பட்ட 18 எம்.எல்.ஏ.க்களும் என்னுடன் தான் உள்ளனர். அவர்களின் முடிவே எனது முடிவு. மக்களுக்கு எதிரான அரசு நீடிக்கிறது என்ற ஒற்றை வரியே பதிலாக இருக்கிறது. தீர்ப்பால் தங்களுக்கு எந்த பின்னடைவும் இல்லை. 

இவ்வாறு கூறினார். சென்னை ஐகோர்ட் வளாகத்தில் இருந்த தினகரன் தரப்பு வழக்கறிஞர் செந்தூர் பாண்டியன் கூறுகையில், சபாநாயகரின் தகுதி நீக்க முடிவுக்கு ஆதரவாக நீதிபதிகள் எந்த கருத்தும் தெரிவிக்கவில்லை. மூன்றாவது நீதிபதி அடுத்த வாரம் அறிவிக்கப்பட வாய்ப்பு உள்ளது. இரண்டு மாதங்களில் இந்த வழக்கில் இறுதி தீர்ப்பு வழங்கப்படும் என தெரிகிறது என்றார்.
Tags:    

Similar News