செய்திகள்

பல ஆண்டுகளாக கோவில் சொத்து பராமரிப்பு கணக்கு தணிக்கை செய்யப்படவில்லை- எச்.ராஜா

Published On 2018-06-12 10:23 GMT   |   Update On 2018-06-12 10:23 GMT
தமிழகத்தில் கடந்த பல ஆண்டுகளாக கோவில் சொத்து பராமரிப்பு கணக்கு தணிக்கை செய்யப்படவில்லை என்று பா.ஜ.க. தேசிய செயலாளர் எச்.ராஜா குற்றம் சாட்டியுள்ளார்.
திருச்சி:

திருச்சி ஸ்ரீரங்கம் ஆலயம் மீட்பு குழு சார்பில் ஸ்ரீரங்கம் புனிதம் காப்போம் என்ற பொதுக்கூட்டம் நடந்தது. செண்பக மன்னார் செண்டலங்கார ஜீயர் தலைமை தாங்கினார்.

இதில் சிறப்பு விருந்தினராக பா.ஜ.க. தேசிய செயலாளர் எச்.ராஜா கலந்து கொண்டு பேசியதாவது:-

கோவில் ஆகம விதிகளில் அரசு தலையிடக்கூடாது என்று சுப்ரீம் கோர்ட்டு 1940 ஆண்டு தீர்ப்பில் உள்ளது. இதனை தமிழக அறநிலையத்துறை கடைபிடிக்கவில்லை. கோவில்களுக்குள் அறநிலையத்துறை நுழையக்கூடாது என்று 1965-ம் ஆண்டு தீர்ப்பு உள்ளது. இதுவரை அதற்கு எந்த தடை ஆணையும் இல்லை. இதனால் அறநிலையத்துறை கோவில்களில் இருக்க கூடாது.

தமிழகத்தில் 38 ஆயிரத்து 635 கோவில்கள் உள்ளதாக கூறுகின்றனர். ஆனால் 5 சதவீத கோவில்களையே காணவில்லை. 10 சதவீதம் கோவில்கள் சிதிலமடைந்துள்ளன. கோவில் நிலங்களை நிர்வகிக்க 628 அதிகாரிகள் இருந்தும் நாளுக்கு நாள் கோவில்கள் மாயமாகி வருகின்றன.

கோவில் குருக்கள் அனைவருக்கும் ஒரு ஆண்டுக்கு ரூ.58 ஆயிரம் மட்டுமே சம்பளம் வழங்கப்படுவதாக ஆவணங்களில் உள்ளன. அதிகாரிகள், பணியாளர்கள் கோவில் வருவாயில் 18 சதவீதம் பராமரிப்பு என்ற போர்வையில் சுருட்டப்படுகின்றன.

கடந்த பல ஆண்டுகளாக கோவில் சொத்துக்கள் பராமரிப்புக்கு கணக்கு தணிக்கை நடக்கவில்லை. ஆனால் இதற்காக கோவில் வருவாயில் 4.5 சதவீதம் நிதி ஒதுக்கப்பட்டு செலவிடப்பட்டுள்ளதாக அரசு தெரிவிக்கிறது. ஸ்ரீரங்கம் கோவிலுக்கு 403 ஏக்கர் புஞ்சை, 15 தோப்புகள், 2 வணிக வளாகம் என்று கோடிக்கணக்கில் சொத்துக்கள் உள்ளன.

இதனை முறையாக பராமரித்து வரி வசூல் செய்வதில் அதிகாரிகள் கவனம் செலுத்தவில்லை. மாறாக கோவில் ஆகம விதிகளில் தொடர்ந்து தலையிட்டு பக்தர்களின் கோபத்தை சம்பாதிக்கின்றனர். இந்து கோவில்களை விட்டு அறநிலையத்துறை வெளியேற்றப்பட வேண்டும் என்ற நிலைப்பாட்டில் உறுதியாக உள்ளோம்.

தமிழகத்தில் உள்ள கோவில் நிலையங்களில் உள்ள 20 லட்சம் வீடுகளுக்கு குறைந்த பட்சம் வாடகை வசூல் செய்தால் கூட பல லட்சம் கோடிகள் வருமானம் வரும். இதை வைத்து இந்து குழந்தைகளுக்கு இலவச தரமான மருத்துவத்தை அளிக்க முடியும்.

இவ்வாறு அவர் பேசினார். #BJP #Tamilnews
Tags:    

Similar News