திருவொற்றியூரில் வடமாநில வாலிபர் கழுத்தை அறுத்து கொலை
திருவொற்றியூர்:
திருவொற்றியூர் விம்கோ நகரில் தனியார் பள்ளி உள்ளது. இதன் பின் பகுதியில் உள்ள மழை நீர் கால்வாயில் சுமார் 25 வயது மதிக்கத்தக்க வாலிபர் கொலை செய்யப்பட்டு கிடந்தார். அவரது கழுத்து அறுக்கப்பட்டு இருந்தது.
இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த அப்பகுதி மக்கள் திருவொற்றியூர் போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் விரைந்து வந்து உடலை கைப்பற்றி விசாரணை நடத்தினர்.
கொலையுண்ட வாலிபர் யார்? எந்த பகுதியை சேர்ந்தவர் என்று தெரிய வில்லை. வட மாநிலத்தவர் தோற்றத்தில் காணப்பட்டார். டி-சர்டடும், ஷாட்சும் அணிந்து இருந்தார்.
உடல் கிடந்த இடம் அருகே கத்தி கிடந்தது. அதனை போலீசார் கைப்பற்றினர். கொலையாளிகள் யார்? கொலைக்கான காரணம் என்ன என்பது குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.
திருவொற்றியூர், மணலி பகுதியில் ஏராளமான தொழிற்சாலைகள் உள்ளன. இதில் வட மாநில வாலிபர்கள் பலர் வேலை பார்த்து வருகிறார்கள்.
எனவே நண்பர்களுக்கிடையே ஏற்பட்ட தகராறில் அவரை யாரேனும் அழைத்து வந்து கொலை செய்தனரா? என்ற கோணத்தில் விசாரணை தொடங்கி உள்ளனர்.
இது தொடர்பாக தொழிற்சாலைகளில் வேலை பார்த்த வட மாநில வாலிபர் யாரேனும் மாயமாகி உள்ளனரா? என்ற விபரத்தை சேகரித்து வருகிறார்கள்.
வாலிபர் கழுத்து அறுத்து கொலை செய்யப்பட்ட சம்பவம் திருவொற்றியூர் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.