செய்திகள்

முத்துப்பேட்டை அருகே 2 டாஸ்மாக் கடைகளில் மதுபாட்டில்கள் திருட்டு

Published On 2018-06-09 16:49 IST   |   Update On 2018-06-09 16:49:00 IST
அடுத்தடுத்து 2 டாஸ்மாக் கடைகளில் கொள்ளை நடந்த சம்பவம் முத்துப்பேட்டையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
முத்துப்பேட்டை:

திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டை அடுத்த இடும்பாவனம் பகுதி வேதாரண்யம் மெயின் ரோட்டில் வயல்வெளியில் டாஸ்மாக் கடை உள்ளது. போதிய பாதுகாப்பு இல்லாத இந்த டாஸ்மாக் கடையை கடந்த ஜனவரி 6-ந்தேதி மர்ம நபர்கள் உடைத்து திருடி சென்றனர். இந்நிலையில், நேற்று கடையை ஊழியர் திறக்க வந்தபோது பூட்டு உடைக்கப்பட்டு 2,600 பிராந்தி பாட்டில், 13 பீர் பாட்டில், ரூ.3700 ரொக்கம் ஆகியவை கொள்ளையடிக்கப்பட்டது தெரியவந்தது. இதன் மொத்த மதிப்பு 2 லட்சத்து 93 ஆயிரமாகும். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த முத்துப்பேட்டை இன்ஸ்பெக்டர் ராஜேஷ், சப்-இன்ஸ்பெக்டர் கணபதி தலைமையிலான போலீசார் விசாரணை செய்தனர். இதில் இரவில் வந்த மர்ம நபர்கள் சரக்குகளை லாரியில் திருடிச் சென்றது தெரியவந்தது. மேலும் இதுகுறித்து டாஸ்மாக் கடை சூபர்வைசர் சத்தியமூர்த்தி முத்துப்பேட்டை போலீசில் கொடுத்த புகாரின்பேரில் வழக்கு பதிவு செய்த போலீசார் தனிப்படை அமைத்து மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.

முத்துப்பேட்டை வெள்ளகுளம் சுடுகாடு எதிரே டாஸ்மார்க் கடை உள்ளது. இன்று காலை அந்த பகுதியில் சென்ற சிலர் பார்த்தபோது டாஸ்மார்க் கடையின் பூட்டு உடைத்து கிடப்பது தெரியவந்தது. இதுகுறித்து முத்துப்பேட்டை போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. டி.எஸ்.பி. இனிகோ திவ்யன், இன்ஸ்பெக்டர் ராஜேஷ், சப்-இன்ஸ்பெக்டர் கணபதி ஆகியோர் வந்து விசாரணை நடத்தினர். இதில் கடையில் இருந்த ஆயிரக்கணக்கான மதிப்புள்ள மதுபாட்டில்கள் திருட்டு போய் இருப்பது தெரியவந்தது. இதுகுறித்து முத்துப்பேட்டை போலீசில் டாஸ்மார்க் சூப்பர்வைசர் உத்தராபதி கொடுத்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

அடுத்தடுத்து 2 டாஸ்மாக் கடைகளில் கொள்ளை நடந்த சம்பவம் முத்துப்பேட்டையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. #Tamilnews
Tags:    

Similar News