திருமங்கலத்தில் பெண்ணிடம் வழிப்பறியில் ஈடுபட்ட ஆட்டோ டிரைவர் உள்பட 2 பேர் கைது
பேரையூர்:
திருமங்கலம் நாகசாமி நகரைச் சேர்ந்தவர் செல்வக்குமார். இவரது மனைவி சித்ரா (வயது40). இவரும், இவரது மகளும் கடந்த 3-ந்தேதி அதே பகுதியில் உள்ள பெருமாள் கோவில் அருகே நடந்து சென்று கொண்டிருந்தனர்.
அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த 2 பேர் சித்ராவை வழிமறித்து அவரது கழுத்தில் கிடந்த 5 பவுன் நகையை பறித்துக் கொண்டு தப்பினர்.
இதுகுறித்த புகாரின் பேரில் திருமங்கலம் நகர் போலீசார் வழக்குப்பதிவு விசாரணை மேற்கொண்டனர்.
இதில் சித்ராவிடம் நகையை பறித்தது சாக்கிலிப்பட்டியை சேர்ந்த செல்லக்கண்ணு மகன் திருப்பதிராஜா (வயது28), தனக்கன்குளத்தைச் சேர்ந்த செல்லப்பாண்டி (30) என தெரியவந்தது. இதையடுத்து போலீசார் இருவரையும் கைது செய்து 5 பவுன் நகையை மீட்டனர்.
திருப்பதிராஜா காலையில் ஆட்டோ டிரைவராகவும், இரவில் திருட்டு சம்பவங்களிலும் ஈடுபட்டு வந்துள்ளார். செல்லப்பாண்டி மீது நகை பறிப்பு வழக்குகள் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.