செய்திகள்

கல்பாக்கத்தில் மோட்டார் சைக்கிள் திருடர்கள் 3 பேர் கைது

Published On 2018-06-05 07:05 GMT   |   Update On 2018-06-05 07:05 GMT
கல்பாக்கம் அணுமின் நிலைய ஊழியர்கள் குடியிருக்கும் வளாகத்தில் நிறுத்தி வைக்கப்பட்ட மோட்டார் சைக்கிள்கள் திருடி சென்ற சம்பவம் குறித்து 3 பேரை போலீசார் கைது செய்தனர்.
மாமல்லபுரம்:

கல்பாக்கம் அணுமின் நிலைய ஊழியர்கள் குடியிருக்கும் நகரிய வளாகத்தின் வீடுகளின் எதிரே நிறுத்தி வைக்கப்படும் மோட்டார் சைக்கிள்களை கள்ளச்சாவி போட்டும் பூட்டுகளை உடைத்தும் மர்ம நபர்கள் திருடிச் செல்லும் சம்பவங்கள் அடிக்கடி நடந்து வந்தது.

இது குறித்து கல்பாக்கம், சதுரங்கப்பட்டினம் போலீஸ் நிலையங்களில் ஏராளமான புகார்கள் வந்தன.

இதையடுத்து மாமல்லபுரம் டி.எஸ்.பி. சுப்பாராஜ் உத்தரவின் பேரில் மோட்டார் சைக்கிள் கொள்ளையர்களை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டது.

இந்த நிலையில் பைக் மெக்கானிக் ஒருவர் கொடுத்த தகவலின்படி செய்யூர் பகுதியை சேர்ந்த சதீஷ்குமார், கபால், கமலேஷ் ஆகிய 3 பேரை போலீசார் பிடித்து விசாரித்தனர்.

அவர்கள் கல்ப்பாக்கம் நகரியத்தின் வளாக பகுதியில் சி.சி.டி.வி. கேமராக்கள் பொருத்தப்படாத பகுதிகளை நோட்டமிட்டு மோட்டார் சைக்கிளை திருடி வந்தது தெரியவந்தது. அவர்களிடம் இருந்து 7 மோட்டார் சைக்கிள்கள் பறிமுதல் செய்யப்பட்டது. #tamilnews
Tags:    

Similar News