செய்திகள்

ரெட்டேரியில் கார் தீப்பிடித்து எரிந்து என்ஜினீயர் கருகி பலி

Published On 2018-06-03 16:55 GMT   |   Update On 2018-06-03 16:55 GMT
ரெட்டேரி மேம்பாலம் அருகே இன்று காலை கார் தீப்பிடித்து எரிந்ததில் என்ஜினீயர் கருகி பரிதாபமாக உயிரிழந்தார்.
மாதவரம்:

சென்னை வடபழனி குமரன் நகரை சேர்ந்தவர் தட்சிணாமூர்த்தி, சாப்ட்வேர் என்ஜினீயர். தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வந்தார்.

இவர் தனது காரில் ஆந்திராவில் உள்ள காளஹஸ்தி கோவிலுக்கு சென்றார். அங்கு சாமி தரிசனம் செய்துவிட்டு நேற்று இரவு சென்னைக்கு திரும்பி கொண்டிருந்தார். இன்று அதிகாலை ரெட்டேரி மேம்பாலம் அருகே கார் வந்தது. அப்போது அங்கு வாகனங்கள் மாற்றுப்பாதையில் செல்வதற்காக தடுப்புகள் வைக்கப்பட்டு இருந்தன.

காரில் வேகமாக வந்த தட்சிணாமூர்த்தி தடுப்புகள் இருப்பதை அருகில் வந்த போதுதான் கவனித்தார். இதனால் காரை திருப்பிய போது தடுப்பு மீது மோதி தாறுமாறாக ஓடி பிளாட் பாரத்தில் ஏறி நின்றது.

மோதிய வேகத்தில் கார் என்ஜினில் தீப்பிடித்து பரவியது. இதனால் தட்சிணாமூர்த்தி வெளியே வர முடியவில்லை. கார் தீப்பிடித்து எரிவதை பார்த்த அக்கம் பக்கத்தினர் தட்சிணாமூர்த்தியை மீட்க முயற்சித்தனர். ஆனால் கார் கதவுகளை திறக்க முடியவில்லை. அதற்குள் தீ கார் முழுவதும் பரவி தட்சிணாமூர்த்தி கருகி அலறினார். இது குறித்து செம்பியம் தீயணைப்பு நிலையத்துக்குக்கு தகவல் தெரிவித்தனர்.

தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து காரில் பிடித்த தீயை அணைத்தனர். கார் கதவை திறந்து பார்த்த போது தட்சிணாமூர்த்தி கருகி பிணமாக கிடந்தார்.

அவரது உடலை மீட்டு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். தட்சிணாமூர்த்தி பலியான தகவல் அவரது குடும்பத்தினருக்கு தெரிவிக்கப்பட்டது. இது குறித்து திருமங்கலம் போக்குவரத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கிறார்கள்.
Tags:    

Similar News