செய்திகள்

திண்டிவனம் அருகே சிறுமிக்கு இன்று நடக்க இருந்த திருமணம் தடுத்து நிறுத்தம்

Published On 2018-06-03 14:09 GMT   |   Update On 2018-06-03 14:09 GMT
திண்டிவனம் அருகே இன்று நடைபெற இருந்த சிறுமி திருமணத்தை அதிகாரிகள் தடுத்து நிறுத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திண்டிவனம்:

விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அருகே உள்ள ஊரல் கிராமத்தை சேர்ந்தவர் அன்பழகன் (வயது 26). இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த 16 வயது சிறுமிக்கும் இன்று (ஞாயிற்றுக்கிழமை) திருமணம் நடைபெற இருந்தது.

இதையொட்டி திருமண ஏற்பாடுகளில் மணமக்களின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் மும்முரமாக ஈடுபட்டிருந்தனர். இந்நிலையில் 18 வயது பூர்த்தியடையாத சிறுமிக்கு திருமணம் நடத்தி வைப்பதாக சைல்டுலைன் அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது.

அதன் பேரில் சைல்டு லைன் ஒருங்கிணைப்பாளர் லட்சுமிபதி, திண்டிவனம் தாசில்தார் கீதா, அனைத்து மகளிர் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் விஜி ஆகியோர் ஊரல் கிராமத்துக்கு விரைந்து சென்று மணமகளின் பெற்றோரிடம் விசாரணை நடத்தினர்.

18 வயது பூர்த்தியடையாத சிறுமிக்கு திருமணம் நடத்தி வைப்பது சட்டப்படி குற்றமாகும். அதையும் மீறி திருமணம் நடத்தி வைத்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அதிகாரிகள் அறிவுரை கூறினர்.

இதனையேற்ற மணமகளின் பெற்றோர், திருமணத்தை நிறுத்திக்கொள்வதாக அதிகாரிகளிடம் கூறியதோடு எழுத்துப்பூர்வமாக எழுதி கொடுத்தனர்.

இதைத்தொடர்ந்து, அந்த சிறுமியை மீட்டு சமூக நலத்துறை மூலம் மாவட்ட குழந்தைகள் நல அலுவலகத்தில் அதிகாரிகள் ஒப்படைத்தனர். இதன் மூலம் இன்று நடைபெற இருந்த சிறுமியின் திருமணம் தடுத்து நிறுத்தப்பட்டது.

Tags:    

Similar News