வாணரப்பேட்டையில் மாடி படிக்கட்டில் தவறி விழுந்த தச்சு தொழிலாளி பலி
புதுச்சேரி:
புதுவை வாணரப்பேட்டை நாகமுத்து மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் ராஜேந்திரன் (வயது 63). தச்சு தொழிலாளி இவரது மனைவி பிரேமா. இவர்களுக்கு கணேஷ், ரமேஷ் ஆகிய 2 மகன்கள் உள்ளனர்.
2 மகன்களுக்கும் திருமணமாகி விட்டது. கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு பிரேமா இறந்து போனார். இதையடுத்து ராஜேந்திரன் தனது இளைய மகன் ரமேசுடன் வசித்து வந்தார்.
மனைவி இறந்த வேதனையில் ராஜேந்திரன் குடிபழக்கத்துக்கு ஆளானார். இறந்து போன மனைவியை மறக்க முடியாமல் அளவுக்கு அதிகமாக மது குடித்து வந்தார்.
சம்பவத்தன்று ரமேஷ் சுற்றுலா சென்றிருந்த நிலையில் ராஜேந்திரன் அளவுக்கு அதிகமாகமது குடித்து விட்டு வீட்டுக்கு வந்தார். வீட்டின் மாடி படிக்கட்டில் ஏறிய போது நிலை தடுமாறி அவர் கீழே விழுந்தார்.
இதில், தலையில் பலத்த காயம் அடைந்து ரத்த வெள்ளத்தில் மயங்கி கிடந்த ராஜேந்திரனை பக்கத்து வீட்டுக்காரர் பரசுராமன் மீட்டு புதுவை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தார். அங்கு சிகிச்சை பெற்று வந்த ராஜேந்திரன் நேற்று இரவு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்து போனார்.
இதுகுறித்த புகாரின் பேரில் ஒதியஞ்சாலை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர்கள் கீர்த்தி, நாராயணசாமி ஆகியோர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.