செய்திகள்

ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட அமைச்சரவையில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் - மு.க.ஸ்டாலின்

Published On 2018-05-28 17:01 GMT   |   Update On 2018-05-28 17:01 GMT
ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட அமைச்சரவையில் தீர்மானம் நிறைவேற்றி அரசாணை வெளியிட வேண்டும் என திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளார். #BanSterlite #MKStalin
சென்னை:

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை எதிர்ப்பாளர்கள் நடத்திய போராட்டத்தில் கடந்த 22 மற்றும் 23-ம் தேதி போலீசார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 13 பேர் பலியாகினர். இதனால், ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட நடவடிக்கை எடுக்கவேண்டும் என காரசாரமாக கூறினர். இதையடுத்து, ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடுவதற்கு தமிழக அரசு இன்று மாலை அரசாணை வெளியிட்டது. 

அரசாணை வெளியிடப்பட்ட சில மணி நேரங்களில் மாவட்ட கலெக்டர் சந்தீப் நந்தூரி அங்கு சென்று, ஸ்டெர்லைட் ஆலைக்கு சீல் வைத்து, அரசின் நோட்டீஸை வாயில் கதவில் ஒட்டினார்.

இந்நிலையில், ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட அமைச்சரவையில் தீர்மானம் நிறைவேற்றி அரசாணை வெளியிட வேண்டும்  என திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் டுவிட்டரில் கூறுகையில், கடந்த 2013ல் நாங்கள் ஆலையை மூடுவதுபோல் மூடுகிறோம். நீங்கள் நீதிமன்றம் சென்று உத்தரவை பெற்று ஆலையை திறந்து கொள்ளுங்கள் என்ற கண் துடைப்பு நாடகத்தை அன்றைய முதலமைச்சர் ஜெயலலிதா அம்மையார் நடத்தியதை போல், இன்றைக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமியும் கண் துடைப்பு நாடகம் நடத்துகிறார்.

ஸ்டெர்லைட் ஆலையை மூடுவதில் முதலமைச்சருக்கு உண்மையிலேயே நல்லெண்ணம் இருக்கிறது என்றால் உரிய சட்டமுறைகளின் படியும், உடனடியாக அமைச்சரவையைக் கூட்டியும் ஆலையின் பாதிப்புகளை அரசு ஆணையில் பட்டியலிட்டு உத்தரவிடுவதே உரிய தீர்வாக அமையும் என பதிவிட்டுள்ளார். #BanSterlite #MKStalin
Tags:    

Similar News