செய்திகள்

அதியமான்கோட்டை அருகே குடிநீர் கேட்டு பொதுமக்கள் சாலை மறியல்

Published On 2018-05-26 16:49 GMT   |   Update On 2018-05-26 16:49 GMT
அதியமான்கோட்டை அருகே குடிநீர் விநியோகம் செய்யப்படாததை கண்டித்து பொதுமக்கள் இன்று காலை சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் அந்த பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

தருமபுரி:

தருமபுரி அருகே அதியமான் கோட்டையை அடுத்த தேவரசம்பட்டியில் சுமார் 500-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வாழ்ந்து வருகின்றனர். இந்த பகுதியில் நிலத்தடிநீரை பயன்படுத்தி வந்தனர்.

இதைத்தொடர்ந்து அந்த பகுதியில் ஒகேனக்கல் கூட்டு குடிநீர் திட்டத்தின் மூலம் குடிநீர் விநியோகம் செய்யப்பட்டது. இதனை அப்பகுதி பொதுமக்கள் பயன்படுத்தி வந்தனர்.

கடந்த சில நாட்களுக்கு முன்பு அந்த பகுதியில் ரெயில்வே மேம்பாலம் கட்டும் பணிகள் நடைபெற்றது. இதற்காக அந்த பகுதியில் குழி தோண்டினர். அப்போது ஒகேனக்கல் கூட்டு குடிநீர் செல்லும் குழாய் உடைப்பு ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

இதனை சரிசெய்யாமல் அவர்கள் அப்படியே குழியை மூடி விட்டனர். இதனால் அப்பகுதியில் சரிவர குடிநீர் விநியோகம் செய்யப்படவில்லை.

குடிநீர் சரிவர விநியோகம் செய்யப்படாததை குறித்து அப்பகுதி பொதுமக்கள் பலமுறை சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் தெரிவித்தனர். ஆனால் அவர்கள் எந்தவித நடவடிக்கையும் நடவடிக்கை எடுக்கவில்லை.

இதனால் ஆத்திரம் அடைந்த அப்பகுதி பொதுமக்கள் இன்று காலை தேவரசம்பட்டி அருகே உள்ள சாலையில் பெண்கள் உள்பட 50-க்கும் மேற்பட்டோர் திரண்டு வந்து மறியலில் ஈடுபட்டனர்.

இதுகுறித்து தகவலறிந்த அதியமான்கோட்டை போலீசார் மற்றும் அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு வந்து மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். குடிநீர் விநியோகிக்க உடனே நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தனர். பின்னர் அவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

Tags:    

Similar News