செய்திகள்

பொறியியல் படிப்புக்கு ஆன்லைனில் விண்ணப்பிக்க 3 நாள் அவகாசம் நீட்டிப்பு

Published On 2018-05-25 08:35 GMT   |   Update On 2018-05-25 08:35 GMT
தமிழகத்தில் பொறியியல் படிப்பில் சேருவதற்காக ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க மூன்று நாட்கள் அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. #AnnaUniversity #TNEA2018
சென்னை:

தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவத்திற்குப் பிறகு தொடர்ந்து பதற்றமான சூழல் நிலவியதால், 144 தடை உத்தரவு நீட்டிக்கப்பட்டது. வன்முறை தொடர்பான தகவல்கள் பரவுவதை தடுக்கும் வகையில் தூத்துக்குடி, நெல்லை மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் இணையதள சேவை முடக்கி வைக்கப்பட்டுள்ளது.

இதுபோன்ற காரணங்களால் மாணவர்கள் தேர்வுகளுக்கு தயாராக முடியாமலும், வெளியூர் செல்ல முடியாமலும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். மாணவர் சேர்க்கை, மதிப்பெண் மறுகூட்டல் உள்ளிட்ட பணிகளுக்காக இணையதளம் மூலம் விண்ணப்பிக்க முடியாமல் பாதிக்கப்பட்டுள்ளனர்.

எனவே, மாணவர்களின் நலன் கருதி பி.இ படிப்புக்கு  ஆன்லைனில் விண்ணப்பிக்க 3 நாள் அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. மே 30 ஆம் தேதியுடன் அவகாசம் முடியவிருந்த நிலையில் ஜூன் 2 வரை அவகாசம் நீட்டிக்கப்பட்டிருக்கிறது. தூத்துக்குடி, நெல்லை, கன்னியாகுமரி மாவட்டங்களில் இண்டர்நெட் சேவை முடக்கப்பட்டுள்ளதால் அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.

சென்னை ஐகோர்ட்டில் நடந்த விசாரணையில் அண்ணா பல்கலைக்கழகம் இதை தெரிவித்ததாக தமிழக அரசு கூறியுள்ளது. இதுவரை 1.12 லட்சத்துக்கு மேற்பட்ட மாணவ-மாணவிகள் விண்ணப்பித்துள்ளனர்.

28-ம் தேதி வரை நடைபெற இருந்த தேர்வுகளை அண்ணா பல்கலைக்கழகம் ஏற்கனவே ஒத்தி வைத்துள்ளது. இந்த தேர்வுகள் ஜூன் 5ம் தேதி முதல் 7ம்தேதி வரை நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இதேபோல் நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி ஆகிய மூன்று மாவட்டங்களைச் சேர்ந்த மாணவர்கள் பத்தாம் வகுப்பு மறுகூட்டலுக்கு விண்ணப்பிக்க அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.  #SterliteProtest #InternetSuspend #AnnaUniversity #TNEA2018
Tags:    

Similar News