செய்திகள்

எழும்பூர்-கோடம்பாக்கம் இடையே பாரம்பரிய நீராவி ரெயில் 27-ந் தேதி இயக்கம்

Published On 2018-05-25 03:32 GMT   |   Update On 2018-05-25 03:32 GMT
சென்னை எழும்பூர் ரெயில் நிலையத்தில் இருந்து கோடம்பாக்கம் வரை 27-ந் தேதி பாரம்பரிய நீராவி ரெயில் என்ஜின் காலை 10 மணிக்கு இயக்கப்படுகிறது.
சென்னை:

தெற்கு ரெயில்வே முதன்மை வணிக மேலாளர் பிரியம்வதா நேற்று செய்தியாளர்களிடம் கூறியதாவது:-

பயணிகளின் தேவைகளுக்காக முன்பதிவு இல்லா ரெயில் டிக்கெட்டுகளை பதிவு செய்ய ரெயில்வே துறை சார்பில் யூ.டி.எஸ். ‘ஆப்’ கடந்த மாதம் அறிமுகப்படுத்தப்பட்டது. இதன் பயன்பாட்டை அதிகரிக்கும் விதமாக நேற்று முதல் அதன் பயன்பாட்டாளர்களுக்கு 5 சதவீதம் கூடுதல் சலுகை கொடுக்கப்பட்டுள்ளது.

சென்னை எழும்பூர் ரெயில் நிலையத்தில் இருந்து கோடம்பாக்கம் வரை 27-ந் தேதி பாரம்பரிய நீராவி ரெயில் என்ஜின் காலை 10 மணிக்கு இயக்கப்படும். இதில் ரெயில் என்ஜினுடன் 40 பயணிகள் அமர்ந்து செல்வதற்கான இருக்கை வசதி கொண்ட குளிர்சாதன பெட்டி இணைக்கப்படும். பாரம்பரிய ரெயிலில் பயணம் செய்ய விருப்பம் உள்ளவர்கள் 27-ந் தேதி காலை எழும்பூர் ரெயில் நிலையத்தில் நேரடியாக பதிவு செய்யலாம். பயணக்கட்டணமாக பெரியவர்களுக்கு ரூ.650 மற்றும் குழந்தைகளுக்கு ரூ.500 செலுத்தவேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

அப்போது முதன்மை வணிக மேலாளர் (பயணிகள் மேலான்மை) வினயன், மூத்த மக்கள் தொடர்பு அதிகாரி ஓம் பிரகாஷ் ஆகியோர் உடன் இருந்தனர். பாரம்பரிய ரெயிலில் பயணிகள் பயணம் செய்ய உள்ளது இதுவே முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது. 
Tags:    

Similar News