செய்திகள்
புதுவை 45 அடி ரோட்டில் வீச்சரிவாளை காட்டி பொதுமக்களை மிரட்டிய ரவுடி கைது
புதுவை 45 அடி ரோட்டில் வீச்சரிவாளை காட்டி பொதுமக்களை மிரட்டிய ரவுடியை போலீசார் கைது செய்தனர்.
புதுச்சேரி:
புதுவை 45 அடி ரோட்டில் தனியார் மதுபான கடை அருகே நேற்று மாலை ஒரு வாலிபர் நின்று கொண்டு அவ்வழியே சென்ற பொதுமக்களை வீச்சரிவாளை காட்டி மிரட்டி கொண்டு இருந்தார்.
இதுபற்றிய தகவலின் பேரில் பெரியகடை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் முருகன் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து அந்த வாலிபரை சுற்றி வளைத்து பிடித்தனர்.
அவரிடம் இருந்து வீச்சரி வாளை பறிமுதல் செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர் புதுவை ரெயின்போ நகரை சேர்ந்த சிவபெருமாள் (வயது 23) என்பதும் ரவுடியான இவர் டி.வி. நகர் அக்கு கொலை வழக்கு உள்ளிட்ட 3 கொலை வழக்கு மற்றும் 5 அடி-தடி வழக்குகள் உள்ளதும் தெரிய வந்தது. இதையடுத்து சிவபெருமாளை போலீசார் கைது செய்தனர்.