செய்திகள்

சாத்தூர் அருகே விபத்தில் சிக்கியவர்களுக்கு அமைச்சர் ராஜேந்திரபாலாஜி உதவி

Published On 2018-05-21 13:28 GMT   |   Update On 2018-05-21 13:28 GMT
சாத்தூர் அருகே சாலை விபத்தில் சிக்கியவர்களை மீட்டு மருத்துவ மனையில் அமைச்சர் கே.டி. ராஜேந்திர பாலாஜி சேர்த்தார்.

சாத்தூர்:

சாத்தூர் அருகேயுள்ள ஏழாயிரம்பண்ணை பாண்டியாபுரத்தை சேர்ந்தவர் ராஜ்குமார் (25). இவரும் உறவினர் வேல்ராஜ் (21) என்பவரும் நள்ளி அருகே சிங்கமுடையார் கோவிலுக்கு சென்று விட்டு சாத்தூர்-கோவில்பட்டி 4 வழிச்சாலையில் டூவீலரில் சென்று கொண்டிருந்தனர்.

வள்ளிமில் அருகே எதிர்திசையில் சென்று கொண்டிருந்த போது அம்பையிலிருந்து கோவை நோக்கி வந்த சொகுசு கார் டூவீலர் மீது மோதியது. இதில் சம்பவ இடத்திலேயே ராஜ்குமார் உயிரிழந்தார்.

அப்போது கோவில்பட்டியில் கட்சி நிர்வாகி திருமண விழாவில் கலந்து கொண்டுவிட்டு அந்த வழியாக வந்த பால் வளத்துறை அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி உடனடியாக காரைநிறுத்தி மீட்பு பணியில் ஈடுபட்டார்.

அமைச்சருடன் பாதுகாப்பு போலீசாரும் மீட்பு பணியில் ஈடுபட்டனர். விபத்து குறித்து சாத்தூர் போலீஸ் மற்றும் ஆம்புலன்ஸ் வாகனங்களுக்கு அமைச்சர் தகவல் தெரிவித்தார்.

காயம் அடைந்த வேல்ராஜூக்கு ஆறுதல் கூறி கோவில்பட்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார்.

இந்த விபத்து குறித்து சாத்தூர் தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News