சேலத்தில் அரசு பஸ் டிரைவரை தாக்கிய வக்கீல் கைது
சேலம்:
சேலம் அயோத்தியாப்பட்டணம் அருகே உள்ள மாசிநாயக்கன்பட்டியை சேர்ந்தவர் அன்பரசன் (வயது 47). இவர் நாமக்கல் கோட்டில் வக்கீலாக உள்ளார். தினமும் நாமக்கல்லுக்கு பஸ்சில் சென்று வருவார். இன்று காலையில் கோர்ட்டுக்கு செல்வதற்காக அயோத் தியாப்பட்டிணத்தில் இருந்து ஜங்சன் செல்லும் அரசு பஸ்சில் ஏறினார். பஸ்சை கள்ளக்குறிச்சியை சேர்ந்த ராஜேந்திரன் ஓட்டிச் சென்றார்.
பஸ் சீலநாயக்கன் பட்டி அருகே சென்ற போது வக்கீல் அன்பரசன் டிரைவரிடம் ஏன் பஸ்சை மெதுவாக ஓட்டி செல்கிறீர்கள் என்று வாக்குவாத்தில் ஈடுபட்டார். அப்போது அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரம் அடைந்த வக்கீல், டிரைவர் ராஜேந்திரனை அடித்தார். இதில் அவருக்கு காயம் ஏற்பட்டது. இதனால் பஸ்சை நடு ரோட்டில் நிறுத்தி தகராறில் ஈடுபட்டனர்.
இது குறித்து தகவல் அறிந்து அன்னதானப்பட்டி போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று பேச்சுவார்த்தை நடத்தி, அவர்களை போலீஸ் நிலையத்துக்கு அழைத்து சென்றனர்.
டிரைவர் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் விசாரணை நடத்தி வக்கீல் அன்பரசனை கைது செய்தனர். சேலத்தில் அரசு பஸ் டிரைவரை தாக்கிய சம்பவம் பரபரப்பு ஏற்படுத்தியது.