செய்திகள்

உத்திரமேரூரில் ரூ. 15 லட்சம் கேட்டு வாலிபர் கடத்தல் - 2 பேர் கைது

Published On 2018-05-17 09:49 GMT   |   Update On 2018-05-17 09:49 GMT
உத்திரமேரூரில், வாலிபரை கடத்தி சென்று ரூ.15 லட்சம் கேட்டு தந்தையை மிரட்டிய 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
காஞ்சீபுரம்:

உத்திரமேரூரை அடுத்த சின்னமாங்குளம் பகுதியை சேர்ந்தவர் முனியப்பன். இவரது மகன் ராஜேஷ் (வயது 24). கடந்த 29-ந் தேதி ராஜேஷ் நண்பரின் திருமண நிகழ்ச்சியில் கலந்து கொள்ள சென்றார். பின்னர் அவர் திரும்பி வரவில்லை.

இந்த நிலையில் முனியப்பனின் செல்போனுக்கு மர்ம வாலிபர் பேசினார். அப்போது ராஜேசை கடத்தி வைத்திருப்பதாகவும் அவரை விடுவிக்க ரூ. 15 லட்சம் தர வேண்டும் என்று கூறி இணைப்பை துண்டித்து விட்டார். அதிர்ச்சி அடைந்த முனியப்பன் இது குறித்து உத்திரமேரூர் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.

இதற்கிடையே கடத்தல் கும்பல் ராஜேசை திருவண்ணாமலையில் உள்ள காட்டுப்பகுதியில் சிறை வைத்து இருந்தனர். அவரிடம் இருந்த வங்கி டெபிட் கார்டை பறித்த கும்பல் அதன் மூலம் ஏ.டி.எம்.மில் இருந்து ரூ.15 ஆயிரத்தை எடுத்தனர். பின்னர் 2 நாட்களுக்கு பிறகு ராஜேசை விடுவித்து விட்டனர்.

இதைத் தொடர்ந்து அவர் அப்பகுதி மக்களிடம் பணம் பெற்று அரசு பஸ் மூலம் உத்திரமேரூர் வந்து சேர்ந்தார். இதுபற்றி உத்திரமேரூர் போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் ராஜேசிடம் விசாரணை நடத்தினர்.

இதில் கடத்தலில் ஈடுபட்டது சின்னமாங்குளம் பகுதியை சேர்ந்தவர்கள் என்பது தெரிந்தது. இதையடுத்து அப்பகுதியை சேர்ந்த வீரமுத்து, ஒலையூரை சேர்ந்த மகரஜோதி ஆகிய 2 பேரை கைது செய்தனர்.

மேலும் கூட்டாளிகள் மல்லிகாபுரம் சுதீஷ், நெல்வாய் பிரகாஷ், சின்ன மாங்குளம் புருசோத்தமன் ஆகிய 3 பேரை தேடி வருகிறார்கள்.
Tags:    

Similar News