செய்திகள்

சிவகங்கையில் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் 18-ந் தேதி நடக்கிறது

Published On 2018-05-16 09:34 GMT   |   Update On 2018-05-16 09:34 GMT
சிவகங்கையில் வேலை வாய்ப்பு அலுவலகம் மூலமாக தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம், வருகிற 18-ந் தேதி நடைபெறுகிறது.

சிவகங்கை:

சிவகங்கை கலெக்டர் லதா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:-

வேலைவாய்ப்பற்ற இளைஞர்களின் வேலை வாய்ப்பு மற்றும் வாழ் வாதாரத்தை மேம்படுத்தும் வகையில் ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் “வேலைவாய்ப்பு வெள்ளி” என்ற தலைப்பின் கீழ் தனியார் துறை வேலை வாய்ப்பு முகாம் சிவகங்கை மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் நடைபெறுகிறது.

இதில் வேலை அளிக்கும் நிறுவனங்களும், வேலை தேடுபவர்களும் கலந்து கொண்டு தேவையான ஆட்களை தேர்வு செய்து கொள்ளலாம். வேலை நாடுநர்களும் இந்த வாய்ப்பினைப் பயன்படுத்தி தனியார் நிறுவனங்களின் வேலைவாய்ப்பினைப் பெறலாம்.

அதன் அடிப்படையில் வருகிற 18-ந் தேதி காலை 10 மணியளவில் சிவகங்கை மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலக வளாகத்தில் தனியார் நிறுவனத்தினர் பங்கேற்று சுமார் 50-க்கும் மேற்பட்ட பணி நாடுர்களை தேர்ந்தெடுக்க உள்ளனர்.

கல்வித்தகுதி: ஏதேனும் ஒரு பட்டப்படிப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

பயிற்சியின் போது உதவித் தொகை மற்றும் இதர சலுகைகளும் வழங்கப்படும். விருப்பமுள்ளவர்கள் கல்விச்சான்று, குடும்ப அட்டை, வேலைவாய்ப்பு அடையாள அட்டை, ஆதார் அட்டை ஆகியவற்றுடன் முகாமில் கலந்து கொள்ளலாம்.

முகாமில் பணிவாய்ப்பு பெறுவோருக்கு பதிவு மூப்பு ரத்து செய்யப்படமாட்டது என சிவகங்கை மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் (பொறுப்பு) ராமநாதன் தெரிவித்துள்ளார்.

Tags:    

Similar News