செய்திகள்

உணவு பொட்டலத்தில் பல்லி - தொழிலாளர்கள் 60 பேருக்கு வாந்தி, மயக்கம்

Published On 2018-05-15 21:54 IST   |   Update On 2018-05-15 21:54:00 IST
கொடைரோடு அருகே உணவு அருந்திய தனியார் கம்பெனி தொழிலாளர்கள் 60 பேருக்கு வாந்தி- மயக்கம் ஏற்பட்டது.
கொடைரோடு:

கொடைரோடு அருகே சந்தோ‌ஷபுரத்தில் தனியார் டிராக்டர் கம்பெனி உள்ளது. இங்கு சிப்ட் முறையில் 300 பேர் வேலை பார்த்து வருகின்றனர். நேற்று இரவு 60 பணியாளர்களுக்கு வெளியே ஓட்டலில் இருந்து மொத்தமாக உணவு பொட்டலங்கள் வாங்கி வரப்பட்டது.

இதனை சாப்பிட்ட சில மணி நேரங்களிலேயே தொழிலாளர்களுக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து 60 பேரும் அப்பகுதியில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு சேர்க்கப்பட்டனர்.

உணவு பொட்டலத்தை சோதித்து பார்த்ததில் பல்லி இருந்தது தெரிய வந்தது. இதேபோல் மற்ற பொட்டலங்களிலும் உள்ளதா? என நிறுவனத்தினர் சோதனை செய்தனர். இது குறித்து உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர்கள் இன்று தனியார் நிறுவனம் மற்றும் ஓட்டலில் ஆய்வு செய்ய உள்ளனர்.

கொடைரோடு பகுதியில் பெரும்பாலான ஓட்டல்களில் தரமற்ற உணவு வழங்கப்படுவதாக பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர். மேலும் பிளாஸ்டிக் பயன்பாடுகள் அதிகரித்துள்ளதால் வயிற்று வலி உள்ளிட்ட உபாதைகள் ஏற்படுவதாகவும் பொது மக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

எனவே அதிகாரிகள் இப்பகுதியில் உள்ள ஓட்டல்களில் அதிரடி சோதனை நடத்தி தரமற்ற உணவு விற்பனை செய்யும் நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர்கள் வலியுறுத்தி உள்ளனர்.
Tags:    

Similar News