செய்திகள்

தஞ்சை அருகே நின்ற லாரி மீது கார் மோதல்: 5 பேர் உடல் நசுங்கி பலி

Published On 2018-05-13 09:55 GMT   |   Update On 2018-05-13 09:55 GMT
தஞ்சையில் இன்று அதிகாலை நடந்த விபத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேரும், டிரைவரும் பலியான சம்பவம் புதுப்பட்டினம் கிராமத்தில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தஞ்சாவூர்:

தஞ்சை அடுத்த புதுப்பட்டினம் கிராமம் கீழவஸ்தாசாவடியை சேர்ந்தவர் விஜயகுமார் (வயது 29) டிரைவர். இவரது மனைவி சரண்யா (28). இவர்களது மகள் தனுஸ்ரீ (3).

இந்த நிலையில் சரண்யாவின் சகோதரி இறந்து விட்டார். இதனால் அவரது மகள்களான சாய்வர்சினி (10), ஸ்ரீவர்சினி (8), என்ற 2 குழந்தைகளையும் சரண்யாவின் தந்தை தட்சிணா மூர்த்தி வளர்ந்து வந்தார்.

விஜயகுமார் தனது மனைவி மற்றும் குழந்தைகளுடன் திருச்செந்தூர் முருகன் கோவிலுக்கு கடந்த 2 நாட்களுக்கு முன்பு புறப்பட்டு சென்றார். விஜயகுமாரின் மாமனார் தட்சிணா மூர்த்தி (55), மாமியார் உமாராணி (50) ஆகியோரும் உடன் சென்றனர்.

திருச்செந்தூர் கோவிலில் தரிசனம் செய்து கொண்டு நேற்று இரவு அவர்கள் காரில் ஊருக்கு திரும்பி கொண்டு இருந்தனர். காரை தஞ்சை கீழவஸ்தாசாவடியை சேர்ந்த டிரைவர் அரவிந்த் (27) என்பவர் ஓட்டினார்.

இன்று அதிகாலை 4.30 மணியளவில் தஞ்சை- திருச்சி புறவழிச்சாலை அருகே உள்ள கிரீன் சிட்டி என்ற இடத்தில் கார் வந்து கொண்டிருந்தது.

அப்போது ரோட்டோரத்தில் ஜல்லி கற்கள் பாரம் ஏற்றிய ஒரு லாரி நின்று கொண்டிருந்தது. அந்த சமயத்தில் கார், திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து நின்ற லாரி மீது ‘டமார்’ என்ற பயங்கர சத்தத்துடன் மோதியது. இதில் காரில் பயணம் செய்த விஜயகுமார், அவரது மனைவி சரண்யா, மற்றும் மாமனார் தட்சிணா மூர்த்தி, சிறுமி தனுஸ்ரீ, டிரைவர் அரவிந்த் ஆகிய 5 பேரும் இடி பாடுகளில் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தனர்.

மேலும் காரில் இருந்த உமாராணி, சிறுமிகள் சாய்வர்சினி, ஸ்ரீவர்சினி ஆகிய 3 பேரும் பலத்த காயம் அடைந்து உயிருக்கு போராடி கொண்டிருந்தனர்.

இந்த சம்பவம் பற்றி தஞ்சை தாலுகா போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. தஞ்சை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு செந்தில்குமார், வல்லம் டி.எஸ்.பி. ஜெயச்சந்திரன், இன்ஸ்பெக்டர் பசுபதி ஆகியோர் விரைந்து வந்து விசாரணை நடத்தினர். காயம் அடைந்த 3 பேரையும் மீட்டு தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இந்த விபத்தால் அந்த பகுதியில் சிறிதுநேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

தஞ்சையில் இன்று அதிகாலை நடந்த விபத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேரும், டிரைவரும் பலியான சம்பவம் புதுப்பட்டினம் கிராமத்தில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. #TamilNews

Tags:    

Similar News