செய்திகள்

குத்தாலம் அருகே குடிநீர் வழங்ககோரி பொதுமக்கள் சாலை மறியல்

Published On 2018-05-12 11:30 GMT   |   Update On 2018-05-12 11:30 GMT
குடிநீர் கேட்டு பொது மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் அந்த பகுதியில் சுமார் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

குத்தாலம்:

குத்தாலம் தாலுகா, வலுவூர் ஊராட்சி மேலத்தெருவில் 100-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர்.

இந்த பகுதியில் உள்ள மக்கள் அனைவரும் அங்குள்ள உயர்நிலை நீர் தேக்க தொட்டியில் இருந்து வரும் குடிநீரை பிடித்து பயன்படுத்தி வந்தனர். இந்த தொட்டியில் உள்ள மின்மோட்டார் பழுதாகி கடந்த 4 மாதமாக மேலத்தெரு பகுதிக்கு குடிநீர் வரவில்லை.

இதனால் அந்த பகுதியில் உள்ள பெண்கள் அனைவரும் அருகில் உள்ள தோட்டத்திற்கு சென்று தண்ணீர் பிடித்து பயன்படுத்தி வந்தனர்.

இதுகுறித்து பலமுறை அதிகாரிகளிடம் தெரிவித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனால் ஆத்திரம் அடைந்த மேலத்தெருவைச் சேர்ந்த பெண்கள், ஆண்கள் என 100-க்கும் மேற்பட்டோர் மயிலாடுதுறை- திருவாரூர் செல்லும் வழுவூர் மெயின் ரோட்டில் காலி குடங்களுடன் சாலை மறியலில் ஈடுப்பட்டனர்.

இதுபற்றிய தகவல் கிடைத்ததும் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த குத்தாலம் தாசில்தார் திருமாறன், துணை வட்டார வளர்ச்சி அலுவலர் சரவணன், பெரம்பூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் நடராஜன் மற்றும் போலீசார் சாலை மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி 1 நாளில் மோட்டார் பழுது பார்த்து தண்ணீர் கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளித்தனர்.

இதைதொடர்ந்து பேச்சு வார்த்தையில் உடன்பட்டு பொதுமக்கள் சாலை மறியலை கைவிட்டு அந்த இடத்தை விட்டு கலைந்து சென்றனர்.

குடிநீர் கேட்டு பொது மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் அந்த பகுதியில் சுமார் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Tags:    

Similar News