2040-க்குள் பிளாஸ்டிக்கால் ஏற்படும் உடல்நல பாதிப்பு இரு மடங்காகும்: ஆய்வில் அதிர்ச்சி தகவல்
- பிளாஸ்டிக் உற்பத்தி பல நூறு மடங்குகள் அதிகரித்து வருகிறது.
- பிளாஸ்டிக் கழிவுகளால் ஏற்படும் பாதிப்புகள் 2040-க்குள் இரு மடங்காக உயர வாய்ப்புள்ளது.
புதுடெல்லி:
உலகளவில் பிளாஸ்டிக் மாசுபாட்டை முடிவுக்குக் கொண்டு வருவதை மையமாகக் கொண்டு, ஆண்டுதோறும் ஜூன் 5-ம் தேதி உலக சுற்றுச்சூழல் தினம் கொண்டாடப்படுகிறது.
இன்று எந்தளவுக்கு நவீனம் மனித வாழ்க்கைக்கு உதவுகிறதோ, அதே அளவுக்கு சுற்றுச்சூழலுக்கும், உடல் ஆரோக்கியத்துக்கும் கெடுதலை உண்டாக்குகிறது.
பிளாஸ்டிக் கழிவுகள் நூற்றுக்கணக்கான ஆண்டுகளாக மண்ணில் தங்கி சுற்றுச்சூழலுக்கும், மனிதர்களுக்கும், விலங்குகளுக்கும், இயற்கைக்கும் பேராபத்தை விளைவிக்கின்றன. பிளாஸ்டிக் உற்பத்தி மற்றும் அப்புறப்படுத்துதல் ஆகியவை காலநிலை மாற்றத்திற்கு முக்கிய காரணிகளாக விளங்குகின்றன.
இந்நிலையில், லான்செட் ஆய்வு நிறுவனம் நடத்திய ஆய்வில் வெளியான விவரம்:
பிளாஸ்டிக்கில் உள்ள ரசாயனங்கள் மற்றும் மைக்ரோபிளாஸ்டிக்ஸ் ஆகியவை ஆஸ்துமா, புற்றுநோய், மாரடைப்பு, நீரிழிவு, ஹார்மோன் சமநிலையின்மை ஆகியவற்றை ஏற்படுத்துகின்றன.
கருப்பையில் உள்ள சிசு முதல் முதுமை வரை அனைத்து நிலைகளிலும் பிளாஸ்டிக் மாசுபாடு பாதிப்பை ஏற்படுத்துகிறது.
பிளாஸ்டிக் மாசுபாட்டினால் ஏற்படும் உடல்நலக் கோளாறுகளுக்கு உலகளவில் ஆண்டுக்கு குறைந்தது 1.5 டிரில்லியன் டாலர் செலவாகிறது. தற்போது பிளாஸ்டிக் உற்பத்தி பல நூறு மடங்குக்கு மேல் அதிகரித்துள்ளது.
தயாரிக்கப்படும் பிளாஸ்டிக்குகளில் 10 சதவீதத்துக்கும் குறைவானவையே மறு சுழற்சி செய்யப்படுகின்றன. இதனால் 8,000 மெகா டன்கள் பிளாஸ்டிக் கழிவுகள் பூமியை மாசுபடுத்துகின்றன.
வரும் 2040 ஆம் ஆண்டுக்குள் பிளாஸ்டிக் மாசுபாடுகள் இரு மடங்கிற்கும் அதிகமான சுகாதார அபாயங்களை ஏற்படுத்தும் என்றும், அவசர நடவடிக்கை எடுக்கப்படாவிட்டால் புவி வெப்பமடைதல், காற்று மாசுபாடு மற்றும் நச்சுத்தன்மை வெளிப்பாடு ஆகியவை அதிகரிக்கும் என அந்த ஆய்வு எச்சரிக்கை விடுக்கிறது.